கருவுற்றிருக்கும் பெண்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும்
சிசுவையும் பாதிப்பதாகவும், இதனால் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில்
நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாகவும்
ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுவாக
கருவுற்றிருக்கும் பெண்கள் குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது என
வைத்தியர்கள் கூறுவதுண்டு. ஆனால், சில நாடுகளில் கர்ப்பிணிகள் தங்களது
உடற்சூட்டை கருத்தில் கொண்டு மது அருந்துகின்றனர். ஆனால், மேலும் சிலரோ
போதைக்காக மது அருந்துகின்றனர். இவ்வாறு கர்ப்பிணிகள் அருந்தும் மது
வயிற்றில் உள்ள குழந்தைகளை போதைக்கு அடிமையாக்குவதாக ஆய்வு ஒன்று
தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மது அருந்தும் கர்ப்பிணிகள் குறித்து
அந்நாட்டு சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி,
ஆண்டுதோறும் சுமார் 1500 பிறந்த குழந்தைகளிடையே போதையின் தாக்கம் இருப்பது
தெரியவந்துள்ளது.
கருவுற்ற நிலையில் இந்த குழந்தைகளின் தாய்கள்
ஹெரோய்ன், கொக்கைன் போன்ற கொடிய போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருந்ததால்,
குழந்தைகளின் இரத்தத்திலும் இந்த போதை கலந்திருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 7,800 குழந்தைகள் இவ்வாறு போதைக்கு அடிமையாக பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேல்ஸ்
மாகாணத்தில் 464 குழந்தைகளும், ஸ்காட்லாந்தில் 738 குழந்தைகளும்,
இங்கிலாந்தில் 6,599 குழந்தைகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்துள்ளதாக
அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
