Tuesday, October 7, 2014

ஜெயலலிதா இன்று பிணையில் விடுதலை செய்யப்படலாம். ?????

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரச சிறப்பு சட்டத்தரணி ஆச்சர்யா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார்.

தசரா விடுமுறை நேற்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதால் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றது. நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை நடைபெறும்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா அதன் மீதான விசாரணையை வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு சட்டத்தரணியாக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது.

அரசு சட்டத்தரணியை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன்படி, வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்லமாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்துள்ளது.

குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார்.
Disqus Comments