Friday, February 27, 2015

திருமண உறவுக்கு வெளியே ‘ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை’ தென் கொரிய கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

60 ஆண்டு சட்டம்

தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றம் ஆகும்.

இந்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.

பெருகிய குற்றம்

தென் கொரியாவில் இப்படி முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500 பேர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு மட்டுமே 900 பேர் மீது இந்த குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் இந்த வழக்குகளில் தண்டிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. 2004-ம் ஆண்டு 216 பேர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 42 ஆக குறைந்தது. அதன் பின்னர் 22 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கில் தீர்ப்பு

இந்த நிலையில், கணவர், மனைவி தவிர்த்து இரண்டாவது நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்னும் சட்டத்துக்கு எதிராக அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி பார்க் ஹான் சல் தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், முறைகேடான பாலுறவு கிரிமினல் குற்றம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் இணைந்து வழங்கினார்கள். 2 நீதிபதிகள் மட்டும் இதை எதிர்த்தனர். எனவே மெஜாரிட்டி தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 60 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த சட்டம், செயலற்றுப்போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா?

தீர்ப்பில் நீதிபதி பார்க் ஹான் சல், “மற்றொரு நபருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடானது என்ற வகையில் கண்டனத்துக்கு உரியது தான். ஆனால், தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்க அதிகாரம் தலையிடக்கூடாது” என கூறி உள்ளார்.

இந்த தீர்ப்பை அடுத்து உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்று கருதப்படுகிற தென்கொரியாவின் யுனிடஸ் கார்ப்பரேஷனின் பங்கு விலை எகிறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Disqus Comments