கிண்ணியா பிரதேச மக்கள் வியாழனன்று பெருநாள் கொண்டாடியமையும் ஏனையோர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அறிவித்தலின்படி அன்றையதினம்
நோன்பை நிறைவேற்றியதும் சரியானதே என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுக்கும்
இடையில் இடம்பெற்ற ஷவ்வால் மாத தலைப்பிறை சர்ச்சை தொடர்பான விரிவான கூட்டம்
நிறைவு பெற்றுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே
மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள குறித்த கூட்டறிக்கை வருமாறு:
1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும்
அறிக்கை.
இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட
நிலைப்பாடுகள் இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும்
நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு சகல தரப்பு
உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும் ஐந்து தீர்மானங்களை
மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என
நம்புகிறோம்.
இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான
முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால்
மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே
முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு
செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும்
விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும்.
இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும்
தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து
உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற
பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப்
பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி
நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத்
தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச உலமாக்களோடு
17.08.2013.ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது
உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள்
கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின்
அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும் சரியாகவே நடந்துள்ளனர் எனவும்
தீர்மானிக்கப்பட்டது.
இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஆற்றிய உரையின் சில
வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது
என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது.
இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக்
கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக
முடிவு செய்யப்பட்டது.
*அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்*
*பொதுச் செயலாளர்*
*அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா*
*பொதுச் செயலாளர்*
*அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா*