இம்முறை ஷவ்வால் தலைப்பிறை இலங்கை வாழ் முஸ்லிம் உம்மத்தை நன்றாகவே கலக்கி விட்டது. ஒற்றுமை மிகவும் அவசியப்பட்டு நிற்கும் ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய குழப்பநிலை ஏற்பட்டது மிகவும் கவலைக்குரியது. எமது ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் பலத்தையும் பெரும்பான்மைச் சமூகங்களுக்கு முன்னால் காட்டி பெருமிதப்பட்டு நிற்க வேண்டிய ஒரு நாளில் நாம் சின்னாபின்னப்பட்டுப் போய் நிற்கிறோம். தொடர்ந்து இந்த சமூகத்துக்குள் எவ்வளவு வாதப்பிரதிவாதங்களும் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன என்பதும் நமக்குத் தெரிந்த விடயங்களே. எமது சமூகம் தன் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய நாளில் சுக்கு நூறாகிப் போனதற்கான மூல காரணத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிரச்சினையின் மூலகாரணம்
இம்முறை ஏற்பட்ட பிறைக்குழப்பத்திற்குரிய மூலகாரணமே கடந்த 2006ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சார்பிலும் பிறைக்குழுவின் சார்பிலும் ஏகமனதாக(?) எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தீர்மானங்களில் உள்ள மூன்றாவதும் ஐந்தாவதுமான தீர்மானங்கள்தான்.
இத் தீர்மானங்களின்படி கடந்த 2013.08.07 ஆம் திகதியன்று தலைப்பிறை வெற்றுக் கண்களுக்கு தென்படாது என்ற தமது நம்பிக்கைக்குரிய வானிலைக் கணிப்பீட்டாளர்களின் கணிப்புக்கேற்ப முன் தீர்மானத்திலிருந்த பிறைக் குழு, தமது அந்த முன் கணிப்புக்கு மாற்றமான வகையில் பிறை கண்ட சாட்சியங்கள் வரத் தொடங்கியதும் அவற்றை எப்படியோ நிராகரித்தே ஆக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றது. இதனாலேயே பின்னர் நிகழ்ந்த அவ்வளவு பிரச்சினைகளும் தடுமாற்றங்களும் அமைதியாக நோன்பைப் பூர்த்தி செய்யும் ஆவலுடன் இருந்த அந்த சமூகத்துக்குள் நிகழ்ந்தேறின. எனினும் அந்தக் குழப்பங்களினால் எமக்குக் கிடைத்த ஒரேயொரு நன்மை என்னவெனில் பிறைக்குழுவின் அந்த ஐந்து தீர்மானங்களையும் வெளிப்படையாக அறிந்து கொள்ளக் கிடைத்தமைதான்.
இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணான தீர்மானம்
பிறைக்குழுவின் மூன்றாவது தீர்மானம் இவ்வாறு அமைந்துள்ளது:
'ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியலின் அடிப்படையான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அதன் அடிப்படையில் அன்றைய தினம் பிறை காணாத நாளாகக் கொள்ளப்படும்'
பிறைக்குழுவின் இந்த மூன்றாவது விதியை விளக்கும் வகையில் அதன் ஐந்தாவது தீர்மானம் அமைந்துள்ளது. அதாவது:
'பிறை வெற்றுக் கண்களுக்குத் தெரிவது அசாத்தியம் எனத் தெரிவு செய்யப்பட்ட நாளில் ஒருவர் அல்லது பலர் பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமையகத்துக்குக் கட்டுப்படல் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயற்படல் என்ற வகையிலும் குறித்தநாளில் நோன்பு நோற்பதற்வோ பெருநாளைக் கொண்டாடுவற்கோ பிறரை விண்டவோ பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ பிறையைக்கண்ட அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.
பிறைக்குழுவின் மேற்படி இரு விதிகளையும் பார்க்கும் போது நமக்குத் தெளிவாவது யாதெனில் 'பிறை வெற்றுக்கண்களுக்குத் தெரியுமா தெரியாதா என்பதைத் தீர்மானிப்பது நம்பகமான முஸ்லிம் வானவியலாளர்களாவர். அவர்கள் அப்படித் தீர்மானித்து விட்டால் அந்நாளில் யார் பிறை கண்டாலும் எத்தனைபேர் பிறைகண்டாலும் அவர்கள் எவ்வளவுதான் நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் அவர்களின் சாட்சியம் நிராகரிக்கப்படும். வேண்டுமானால் அவர்கள் மட்டும் அவர்கள் கண்ட பிறைப்படி செயற்படலாம்' என்பதுதான்.
பிறைக்குழுவின் இந்தத் தீர்மானங்கள் நபியவர்களின் தெளிவான சுன்னாவுக்கும் கண்ணியம் மிக்க ஸஹாபாக்கள், ஸலபுஸ்ஸாலிஹீன்கள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஆவைச் சேர்ந்த இமாம்களின் ஏகோபித்த முடிவுக்கும் முற்றிலும் முரணானது என்பதை இங்கு பணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் பிறை சம்பந்தமாகத் தீர்மானம் செய்வதில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை ஹதீஸ் கிரந்தங்களில் தேடிப் பார்க்கும் ஒருவர் அன்றைய மனிதர்கள் சொல்லும் நம்பகமான சாட்சியங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இலகுவாக விளங்கிக் கொள்வார். சிலபோது அறிமுகமில்லாத கிராமப்புற மனிதர் ஒருவர்தான் வந்து பிறைகண்ட செய்தியைச் சொன்னாலும் கூட 'நீ அல்லாஹ் ஒருவன்தான் என சான்று பகர்கிறாயா? முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என சான்று பகர்கிறாயா?' எனக் கேட்டு விட்டு அவர் கூறியதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அபூதாவுத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜஹ், தாரமி முதலிய ஹதீஸ் கிரந்தங்களில் இத்தகைய ஸஹீஹான ஹதீஸ்களை நாம் காணலாம். இந்த அடிப்படையில்தான் எமது இமாம்கள், பிறை கண்டதை நம்பகமான ஒருவர் அல்லது இருவர் உறுதிப்படுத்தினால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற முடிவுக்கு வந்தார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஆரம்பத்தில் நம்பகமான ஒருவர் கண்டாலும் போதும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள்.எனினும் பின்னர் நம்பகமான இருவர் தேவை என்கிறார்கள். இங்கு ஹதீஸ்களின் அடிப்படையில் கண்ணால் காண்பதை வைத்தே செயற்படச்சொல்லும் இமாம் அவர்கள் வானிலைக் கணித்தலை நிராகரிக்கிறார்கள். ( பார்க்க கிதாபுல் உம்மு, பாகம் 3 பக்: 232-233)
வானியல் அடிப்படையிலான கணித்தலை வைத்து இன்று பிறை தெரிவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவதும் அதன் அடிப்படையில் கண்ணால் கண்ட சாட்சியங்களை நிராகரிப்பதும் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முற்றிலும் முரணானது என்பது ஒன்றும் எனது சொந்தக் கருத்தோ அல்லது புதிய கருத்தோ அல்ல. அஹ்லுஸ் சுன்னாக்களால் அங்கீகரிக்கப்பட்ட மிகப் பெரும்பாலான இமாம்களின் கூற்றின்படி அது ஸஹாபாக்களினதும் ஸலபுஸ்ஸாலிஹீன்களினதும் இஜ்மாவான முடிவாகும். இது சம்பந்தமான சில முக்கிய இமாம்களின் கூற்றை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.
ஸஹீஹுல் புகாரியிலுள்ள இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் 'நிச்சயமாக நாம் எழுதாத கணிப்பிடாத சமூகமாவோம். மாதம் என்பது இப்படி இப்படித்தான். அதாவது ஒருதடவை இருபத்தொன்பது இன்னொரு தடவை முப்பது.(இவ்வாறு நபியவர்கள் மூன்று முறை கூறியதாகவும் அவற்றுள் இரு தடவை தமது இரு கைவிரல்களையும் பூரணமாக விரித்துக் காட்டியதாகவும் மூன்றாவது தடவை பெருவிரலை மடித்துக்காட்டி இருபத்தொன்பதாக சைகை செய்ததாகவும் இருபத்தொன்பதாவது நாள் பிறை தென்படாது மறைத்து விட்டால் மாதத்தை முப்பதாகப்பூர்த்தி செய்யுமாறும் நபியவர்கள் கூறியதாக புகாரியிலும் முஸ்லிமிலும் உள்ள ஏனைய ஹதீஸ்களில் உள்ளது)
இந்த ஹதீஸுக்கு இமாம் இப்னு ஹஜர் அல் -அஸ்கலானி(ரஹ்) அவர்கள் அளித்துள்ள விரிவுரையில் கூறுவதாவது: 'பிறையைக் கணிப்பீடு செய்யாமல் -அவ்வாறு கணிக்கத் தெரிந்தவர்கள் பிற்காலத்தில் தோன்றினாலும் கூட கண்ணால் பார்த்துத் தீர்மானிப்பதே தொடர்ந்திருக்கும் சட்டமாகும். மேலும் ஹதீஸின் தெளிவான வசனப்போக்கும் பிறைபார்த்தலில் வானிலைக் கணித்தலை மறுக்கிறது. ஏனெனில் இதற்கு முந்திய ஹதீஸில் நபியவர்கள் கூறுகிறார்கள் ' உங்களுக்கு பிறை தெரியாமல் மறைத்துவிட்டால் மாதக் கணிப்பீட்டை முப்பதாகப்பூர்த்தி செய்யுங்கள்'. மாறாக நபியவர்கள் சொல்லவில்லை 'நீங்கள் கணிப்பீடு தெரிந்தவர்களைக் கேளுங்கள்' என்று றாபிழாக்களைத் தவிர (ஷீஆக்களில்மிகவும்வழிகெட்டபிரிவு) வேறு எவரும் பிறையை வானிலைக்கணிப்பீடுகளின் அடிப்படையில் தீர்மானிப்பவர்களாக இருக்கவில்லை. பின்வந்த சில புகஹாக்கள் இதற்கு சார்பாகக் கருத்துத் தெரிவித்தார்கள் என்று கூறப்படுகின்றது.
எனினும் பிறை விடயத்தில் வானிலைக் கணிப்பீட்டை மேற்கொள்ளக் கூடாது என்பதில் ஸலபுஸ்ஸாலிஹீன்கள் கொண்டுள்ள இஜ்மாவான முடிவு அத்தகையோருக்கு எதிரான தகுந்த ஆதாரமாக அமைந்து விடுகிறது. இமாம் இப்னு பஸீஸா சொல்கிறார் அது ( பிறையை வானியல் அடிப்படையில் கணிப்பிடுவது) பாதிலான மத்ஹபாகும். ஏனெனில் நட்சத்திரங்களின் அசைவில் மூழ்கிப்போய் தீர்மானம் எடுப்பதை ஷரீஅத் தடுத்துள்ளது. ஏனெனில் அது அனுமானமாகும்.அதில் உறுதியான நிலைப்பாடு கிடையாது.
இமாம் இப்னு பத்தால் சொல்கிறார்: இந்த ஹதீஸ் நட்சத்திரங்களின் அசைவு ஓட்டத்தை வைத்து பிறையைக் கணிப்பதை இல்லாமற் செய்து விடுகிறது. இதன்படி பிறையைத் தீர்மானிப்பதன் அடிப்படைஆதாரமாக அமைவது பிறையைக் கண்ணால் காண்பதுதான். ஏனெனில் யூகமே வானிலைக் கணித்தலின் அடிப்படை என்ற வகையில் இதில் அளவுக்கு மீறி எம்மைச்சிரமப்படுத்திக் கொள்வது என்பது உள்ளது. இதனை விட்டும் நாம் தடுக்கப்பட்டுள்ளோம். (விரிவான விளக்கத்துக்குப் பார்க்க: ஸஹீஹுல்புகாரியின் விரிவுரையான பத்ஹுல்பாரி)
வானியல் கணிப்பீடு பற்றிய இமாம் இப்னு தைமிய்யாவின்கருத்து:
பிறைபார்த்தல் பற்றியும் அதனைத் தீர்மானிப்பது பற்றியும் அதில் வானிலை கணிப்பீட்டாளர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளலாமா என்பது பற்றியும் எழும்; அநேகமான சந்தேகங்களுக்கு மிக விரிவான பதில்களை குர்ஆன்,ஹதீஸ்களின் அடிப்படையில் வழங்கியுள்ளவர்கள் இமாம் இப்னுதைமிய்யா அவர்களாவர். அவர்களின் பதாவா தொகுப்பில் 25வது பாகத்தில் கிதாபுஸ் ஸெளம் எனும் பாடத்தில் 109வது பக்கம் தொடக்கம் 208ம் பக்கம் வரை பிறை தொடர்பான அவர்களின் விரிவான விளக்கங்களைக் காணலாம். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரால் பிறை தொடர்பில் இமாம் எடுக்கும் தீர்மானத்துக்குத்தான் கட்டுப்பட வேண்டும் என்பதற்கு அவரது பகிரங்க உரையில் இப்னு தைமிய்யா அவர்களின் இஜ்திஹாத் முடிவே ஆதாரமாகக் காட்டப்பட்டது. அது உண்மைதான். ஆனால், அதனை தம்மிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குரிய பதிலாகச் சொல்லும் இமாமவர்கள், பல இடங்களில் மிகக் கடுமையான தொனியில் வலியுறுத்துகின்ற விடயம்தான் பிறையைத் தீர்மானிப்பதில் வானியல் கணிப்பீடுகள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதாகும்.
ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் அவர்கள் தமது நிலைப்பாட்டுக்கு சார்பாக பதாவாவை ஆய்வு செய்யும் போது இதனைக் கண்ணுற்றிருப்பர்கள் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் சென்ற விடிவெள்ளி இதழில் தலையா? கிளையா? கட்டுரை எழுதிய அஷ்ஷைக் ரீ.ஹைதர் அலி ஹலீமி அவர்களும் இதனை அறிந்திருப்பார்கள். இன்ஷா அல்லாஹ் தமது எதிர்கால செயற்பாடுகளில் இவர்கள் அவற்றைக் கவனத்திற் கொள்வார்கள் என நம்புகிறோம்.
பிறையைத் தீர்மானிப்பதில் பார்வை , கேள்வி ஆகிய புலன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமேயொழிய வானிலைக்கணிப்பீடு அல்ல என்பதை வலியுறுத்தும் இமாமவர்கள் பின்வருமாறு கூறுகிறார்.
' இரண்டு அடிப்படைகள் இங்கு கவனத்திற் கொள்ளப்படல் அவசியமாகும். முதலாவது ஹிலால் என்ற பதம் சப்தமிட்டுக் கூறுதல் என்ற அடிப்படையிலிருந்து பிறந்ததாகும். சப்தமிடுதல் பார்வையாலோ கேள்வியாலோ அடையாமல் நடைபெற முடியாது. இரண்டாவது அல்லாஹ் அதனை மனிதர்களுக்கு நேரக்கணிப்பீடாக ஆக்கி வைத்துள்ளான். பார்வை,கேள்வி ஆகிய புலன்களால் அடைந்தாலேயன்றி அது நேரக்கணிப்பீடாக அமையாது. இவ்வாறு அடைதல் என்பது இல்லாவிட்டால் நேரக் கணிப்பீடும் இல்லை. அப்போது அது பிறையாகவும் அமையாது. இந்தவகையில் பிறையின் உதயத்தை கணிப்பீட்டின் மூலம் உறுதிப்படுத்துவது எவ்வித அடிப்படையுமற்றது' (மஜ்மூஉ பதாவா பாகம்25 பக்:113)
ஸஹீஹுல் புகாரியிலுள்ள இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் 'நிச்சயமாக நாம் எழுதாத கணிப்பிடாத சமூகமாவோம். மாதம் என்பது இப்படி இப்படித்தான். அதாவது ஒருதடவை இருபத்தொன்பது இன்னொரு தடவை முப்பது' எனும் ஹதீஸை வானிலைக் கணிப்பீட்டுக்கு ஆதாரமாகக் கொள்ள முற்படும் சிலர் எழுத, கணிப்பிடத் தெரிந்தவர்கள் உருவாகிவிட்டால் அதனை அடிப்படையாகக் கொள்ளலாம் என்பர். இவ்வாதத்தை முற்றாக மறுக்கும் இமாம் இப்னு தைமிய்யா, நபியவர்கள் இந்த ஹதீஸைக் கூறும் போது சிக்கலான வாரிசுச் சட்டங்களைக் கூட கணக்குப் பார்க்கும் அளவுக்கு திறமையானவர்களும் வஹியை எழுதக்கூடியவர்களும் மன்னர்களுக்குக் கடிதம் எழுதக் கூடியவர்களும் அன்றிருந்தனர். வானியல் கணிப்புகளில் சிறந்தவர்களும் இருந்தனர்.
அப்படியிருந்த போதிலும் கூட நபியவர்கள் இவ்வாறு சொன்னதற்குக் காரணமே பிறையைத் தீர்மானிப்பதில் கணிப்பீடு கூடாது, அது அந்நியர்களின் வழக்கம், இவ்வாறு கணிப்பீடு செய்பவர்கள் முஃமின்களின் வழியல்லாத வழியையே பின்பற்றியவர்களாவர் என்பதை உணர்த்தவும் மேலும் அது அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தது.நாமோ திட்டவட்டமான அடிப்படையில் கண்ணால் கண்டு தீர்மானிக்கிறோம் என்பதை உணர்த்துவதற்குமாகத்தான். அத்தோடு நபியவர்கள் பிறையைத் தீர்மானிப்பதில் கணிப்பீடுகளைப் பயன்படுத்தாத சிறந்த சமூகமாக நாம் உள்ளோம் என்ற பெருமிதத் தொனியிலேயே இவ்வாறு சொன்னார்களே தவிர குறைகூறியல்ல என விளக்கும் இமாமவர்கள் தமது இந்தக் கருத்தை நிறுவும் வகையில் இவ்வாறான வசனப் போக்கில் அமைந்த வேறு பல ஹதீஸ்களையும் மொழியியல் ரீதியிலான விளக்கங்களையும் கொண்டுவருகிறார்.( விரிவான விளக்கத்துக்கு பார்க்க பதாவா பாகம் 25 பக் 144-174)
இன்னுமொரு இடத்தில் இமாம் இப்னு தைமிய்யா இப்படிச் சொல்கிறார் : பிறை விடயத்தில் நட்சத்திரக் கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொள்வது என்பது தெளிவான சுன்னாவின் அடிப்படையிலும் ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையிலும் கூடாது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நபியவர்கள் இது பற்றிச் சொல்லும் போது நாங்கள் (பிறை விடயத்தில்) எழுதாத , கணிக்காத சமூகம் நீங்கள் பிறையைக்கண்டுதான் நோன்பைப் பிடியுங்கள் பிறையைக்கண்டுதான் நோன்பை விடுங்கள்...மாதம் என்பது இருபத்தொன்பதுதான். உங்களுக்கு அன்று பிறை தெரியாமல் இருட்டி விட்டால் (முப்பதாகக்) கணித்துக் கொள்ளுங்கள். ( பக்கம்:166)
பிறை விடயத்தில் வானிலைக் கணிப்பீட்டில் தங்கியிருப்பவர் அதன் அடிப்படையில் பிறை பற்றிய தீர்மானங்களை எடுப்பவர் ஷரீஇத்தில் வழி கெட்டவராவார். மார்க்கத்தில் புதமையை நுழைத்தவராவார். அவர் அறிவிலும் கணித்தலிலும் தவறு செய்தவராகிறார். (பக்கம் 207)
இவ்வாறு வானிலைக் கணிப்பீடுகளை வைத்து பிறையைத் தீர்மானிக்க கூடாது ளூ அது ஷரீஆவுக்கு முரணானது என எமது கண்ணியம் மிக்க இமாம்கள்கள் இவ்வளவு தெளிவாகக் கூறியிருக்க எவ்வாறு எமது பிறைக்குழவினர் ஏகமனதாக ஷரீஆவுக்கு முரணான அந்த விதிகளை நிறைவேற்றினார்களோ தெரியவில்லை.
நன்றி - விடிவெள்ளி
.