Friday, August 30, 2013

புறா பிடித்து தருவதாகக் கூறி தேவாலயத்திற்குள் வைத்து சிறுவன் மீது பாலியல் வல்லுறவு

14 வயதான ஆண் பிள்ளை ஒருவரை கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவன் வனாத்தவில்லு 16ம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சிறுவனது வீட்டிற்கு அருகில் தேவாலயம் ஒன்று இருந்ததாகவும், அந்த தேவாலயத்திற்கு சிறுவன் தினமும் விளையாட செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்றும் சிறுவன் ஆலய வளாகத்திற்குச் சென்றிருந்த வேளை, புறா ஒன்று பிடித்து தருவதாகக் கூறி சந்தேகநபர் சிறுவனை தேவாலயத்திற்குள் அழைத்துச் சென்று கதவுகளை மூடிவிட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுவன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Disqus Comments