Monday, August 5, 2013

நபிகள் நாயகத்தின் வாக்கை கடைபிடித்தால் மதப்பிரச்சனை ஏற்படாது: நாராயணசாமி

(IRM)நபிகள் நாயகத்தின் வாக்கை கடைபிடித்தால் மதப்பிரச்சனை ஏற்படாது என காரைக்கால் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்கால் காங்கிரஸ் கட்சி சிறுபான்மைத்துறை சார்பில், காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மஹாலில், நேற்று முன்தினம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துறை தலைவர் டாக்டர் சோழசிங்கராயர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ-க்கள் நாஜிம், திருமுருகன், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, டவுன் காஜியார் ஆரிபு மரைக்காயர், ரீஜினல் காஜியார் பஷீர் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

"எல்லா மதமும் மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவத்தைதான் போதிக்கின்றன. நபிகள் நாயகமும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தி பல கருத்துக்களை கூறியுள்ளார். இந்தியாவில் ஒரு சில இடங்களில் மதத்தின் பெயரால் பிரச்சனைகள் எழுந்தவண்ணம் உள்ளது. மதத்தை முன்நிறுத்தி போராட்டமும் நடைபெறுகிறது.

இவைகள் ஏற்படாமலிருக்க, அனைத்து மதமும் ஒற்றுமையை கடைபிடிக்கவேண்டும். எந்த மதத்திலும் பிரச்சனைகள் குறித்து கருத்து இல்லை. பிரச்சனைகளை போக்குவது குறித்து தான் கருத்துகள் கூறப்பட்டுள்ளது. அதனால் நபிகள் நாயகத்தின் வாக்கை கடைபிடித்தால் மதப்பிரச்சனை ஏற்படாது" என்றார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ-க்கள் நாஜிம், திருமுருகன், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ மாரிமுத்து, மர்றும் பலர் கலந்துகொண்டனர்.
Disqus Comments