ஒக்டோபர்
முதலாம் திகதி சிறுவர் தினம் எமது இலங்கைத் திருநாட்டில் கொண்டாடப்படுகின்றது.. இத்தகைய தினத்தில்
சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு
அனைவருக்கும் இருக்கிறது. இவ்வாறான நிலையில் இவர்களை பாதுகாக்கும் தலையாய கடமை, நம்
அனைவருக்கும் இருக்கிறது. சர்வதேச சிறுவர் தினத்தை பற்றி பல்வேறு
நாடுகளில் பல்வேறு தினங்களை கணக் கிட்டிருக்கின்றார்கள். இலங்கையில்
ஒக்டோபர் 01ம் திகதி சிறுவர் தினமாக கொண்டாடப்படுகின்றது.
1954ம்
ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனிசெப் அமைப்புகள் இச்சிறுவர்
தினத்தை ஆண்டுதோறும் நவம்பர் 20ம் திகதி கொண்டாடுகிறது. அனைத்து நாடுகளில்
உள்ள சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வை யும் பொது நிலைப்பாட்டையும்
ஏற்படுத்துவதற்காக இத்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப் படுத்தியது.
குழந்தைகளின் நலன்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கான பல பொது நலத்
திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கு இந்நாள் தெரிவு செய்யப்பட்டது.
1954ம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையின்
தீர்மானப்படி இத்தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப் நிறுவனத்திடம்
ஒப்படைக்கப்பட்டது. இதனுடன் இணைந்து யுனெஸ்கோ, சேவ் த சில்ரன் போன்ற
அமைப்புகள் பல செயற்திட்டங்களை முன்வைத்து செயல்பட்டு வருகின்றன.
இச்சிறுவர் தினத்தில் ஆரம்ப காலம்
எனும்போது 1925ம் ஆண்டு ஜூன் 01ம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் சென்
பிரான்ஸிஸ் கோவின் சீன கொசல் ஜெனரலாக கடமையாற்றியவர் சீன அநாதைச்
சிறுவர்களை ஒன்றுதிரட்டி அவர்களை மகிழ்விக்கும் முகமாக டிரகன் படகு விழாவை
சிறப்பாக நடத்தினார். இதே தினத்தன்று ஜெனிவாவின் சிறுவர் தொடர்பான மாநாடு
ஒன்று நடத்தப்பட்டது. இவ்விரு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஜூன்
01ம் திகதி சிறுவர் தினமாக ஆரம்பிக் கப்பட்டது.
சீன மற்றும் கம்யூனிச நாட்டவ ரால்
ஆரம்பிக்கப்பட்டமையால் 2ம் உலக யுத்தத்தின் பின்பு உலகளாவிய ரீதியில்
கம்யூனிச முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான அணி முரண்பாடு காரணமாக இந்நாளை
ஏற்றுக் கொள்ளாமையால் பிறிதொரு நாளை தீர்மானித்ததாக கருதப் படுகிறது.
எக்காரணமாயினும் ஜெனிவா மாநாட்டினையடுத்து சிறுவர்களுக்கு எதிரான பாலியல்
துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் சிறுவர்களை கடத்துதல், கல்வியை
தடுத்தல் போன்ற செயற்பாடுகளை இல்லாதொழிப்ப தொடர்பாக சிந்திக்கப்படுவது
விசேட அம்சமாகும்.
18 வயதுக்கு கீழ்ப்பட்ட வர்கள் சிறுவர்கள்
எனப்படு மிடத்து சிறுவர் போஷாக்கு, சுகாதாரம், கல்வி, மொழி வாழ்வதற்கான
சுதந்திரம் என்பன உள்ளடக்கப்படு கின்றது. ஆசிய நாடுகளுள் சிறுவர்களுக்கு
பாதுகாப்பற்ற நாடுகளுள் இலங்கையும் அடக்கப்பட்டுள்ளது. இலங்கையை பொறுத்த
மட்டில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்
பட்டுள்ளனர். 38 சதவிதத்தினர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்
காரணமாக இவர்களின் நடமாடும் ஆற்றல் சிந்திக்கும் திறன், கல்வி கற்கும்
ஆற்றல் என்பவற்றிற்கு பாரதூர மான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில்
ஐயமில்லை.
தெற்காசிய நாடுகளுள் இலங்கையே இலவச
சுகாதார பராமரிப்புத் திட்டத்தை அமுலாக்கும் பெருமையை கொண்டுள்ளது எனினும்,
விரிவான சுகாதார பராமரிப்பும் சேவைகளும் சுகாதார துறையில் குறிப்பிடத்தக்க
பெறுபேறுகளும் இருந்தும் டெங்கு, மலேரியா, போலியோ, ஜெர்மன் சின்னமுத்து
போன்ற நோய்களின் தாக்க விகிதம் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்த ஆபத்தான
நிலைமை பிள்ளைகளின் வாழ்நாளை குறைப்பது மட்டுமன்றி அவர்களின்
வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
கவ்வியைப் பற்றியதாக சிந்திக்கும் போது,
உலகில் போர் சூழலின் காரணமாகவும் அதன் பின் முகாம் வாழ்விலும் பொருளாதார
பின்னடைவின் காரணமாகவும் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதன்
விளைவாக இவர்களின் பொது விழிப்புணர்வு பிரச்சினையை தீர்க்கும் ஆற்றல்,
கிரகிக்கும் ஆற்றல், தொடர் பாடல் என்பன வளர்ச்சியடையாத நிலை
காணப்படுகின்றது. அத்துடன் குடும்ப சூழ்நிலையினாலும், குழந்தைகளை
வேலைக்கமர்த்தும் தருணத்தில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துர்நடத்தை
என்பவற் றிற்கு உள்ளாக்கப்பட்டு சமூகத்தில்
புறக்கணிக்கப்பட்டவர்களாகின்றார்கள்.
சிறுவர்களின் உரிமைகள் சரியாகப் பேணப்படாத
காரணங்களால் அவர்கள் சட்டபூர்வமற்ற செயல்களிலும் ஈடுபட்டு காவல்
நிலையங்களிலும் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும் குடும்பத்தை பிரிந்து
வளர்கின்றார்கள். பரப்பரப்பு மிகுந்த காலகட்டத்திலே எமது சமுதாயத்துக்கு
சிறந்த பிரஜை களை உருவாக்கித் தரும் பொறுப்பு பெரியவர்களாகிய நம் கடமை.
எனவே சிறுவர் தினம் எந்த தினத்தில் கொண்டாடுகின்றோம் என்பதை விட
இத்தினத்தின் நோக்கம் பற்றி சிந்தித்து செயல்படுவோம்.