தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் நேற்று
இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் அப்பல்கலையின் 53 மாணவர்களை எதிர்வரும் 8 ஆம்
திகதிவரை விளக்கமறியளில் வைக்க சம்மாந்துறை நீதவான் நீதிமன்றின் பதில்
நீதவான் ஏ.எம் நஸீர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 53 மாணவர்களில் 3 மாணவியர்களும் அடங்குகின்றனர்.
நேற்றைய தினம் ஒலுவில் வளாகத்திலிருந்து சம்மாந்துறை
வளாகத்திற்கு வருகை தந்த 3 ஆம் வருட மாணவர்கள் குழுவினர் 2 ஆம் வருட
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கைகலப்பில் 23 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தோரில் 6 மாணவிகளும்
அடங்குவர்.
இதனை அடுத்து சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடமாணவர்கள் நேற்று
வியாழக்கிழமை நண்பகல் 12.00 முதல் 5.00 மணிவரையான காலப்பகுதிக்குள்
வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் நிருவாகம் பணித்திருந்தது.
இந் நிலையிலேயே கைகலப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்ட 53 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதவான்
உத்தரவிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.