Sunday, September 28, 2014

ஜப்பானில் எரிமலை வெடித்துச் சிதறி 30 பேர் பலி?

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் ஓன்டாகே என்ற எரிமலை அமைந்துள்ளது.

இந்த எரிமலையின் மீது ஏறி மலையேற்றக் குழுவினர் அவ்வப்போது பயிற்சி பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது. நேற்று காலை சுமார் 250 பேர் இந்த மலையின் மீது ஏறி பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ஓண்டாகே எரிமலை வெடித்துச் சிதறியது. இதன் விளைவாக வெளிப்பட்ட தீயின் பிழம்புகளும், சாம்பல் மேகங்களும் அம்மலையின் தென்பகுதியில் மூன்று கி.மீ தொலைவு வரை பரவின.

எரிமலையின் மேற்பரப்பில் இருந்து வெளியான சாம்பல் திட்டுகள் மேகங்களில் கலந்து, அப்பகுதி முழுவதையும் இருளில் ஆழ்த்தியது. இதனால், மலையின் சரிவுப்பகுதியில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களது சொந்த முயற்சியில் மலையை விட்டு மெல்ல இறங்கி, தரைப்பகுதியை வந்தடைந்தனர்.

எரிமலையில் இருந்து வெளியான வெப்பம் கலந்த சாம்பல் தாக்கி மூச்சுத்திணறி மயங்கிக் கிடந்த 30 பேரை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளதாக ஒரு பிரிவினரும், அந்த 30 பேரும் பிணமாக மீட்கப்பட்டதாக ஒரு தரப்பினரும் கூறியுள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், சாம்பலுக்குள் புதைந்து காணாமல் போன 30-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
Disqus Comments