-ரிம்சி ஜலீல்- தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் அவர்களுக்கு குருநாகல் மாவட்ட அடிமட்டத் தொண்டன் எழுதும் திறந்த கண்னீர் மடல்..
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் கௌரவ ரவூப் ஹகீம் அவர்களுக்கு..
அஸ்ஸலாமு அலைக்கும் வாரகுமத்துல்லாஹி வாபரகாதுஹு..
வல்ல இறைவனின் உதவியுடன் நீங்கள் நல்ல தேகாரோக்கியத்துடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.எமது கட்சிக்கும் இந்த சமூகத்தும் நீங்கள் புரிந்து வரும் மகத்தான சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்ந்தவனாக இதை எழுதுகிறேன்.
கௌரவத் தலைவர் அவர்களே நான் பல வருடங்களாக உங்கள் கட்சியில் ஒரு போராளியாகவும் சமூகத்தில் உங்களுக்கு எதிராக வரும் சவால்களை முறையடிக்கும் ஒரு கட்சித் தொண்டனாகவும் இதுவரைக் காலமும் கடமைதவறாது இருந்திருக்கின்றேன்.
ஆனால் தலைவரவர்களே எனது உள்ளமும் எம்முடைய குருநாகல் வாழ் மக்களுடைய உள்ளமும் இன்றுவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் தலைவர் உருவாக்கிய மிகப் பெரிய கோட்டைக்குள் நிம்மதியற்றுக் கிடக்கின்றது.
தலைவரவர்களே குருநாகல் மாவட்டம் என்பது பல வருடங்களாக முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்து இன்று வரை அரசியல் அனாதையாக இருக்கினறது நாம் குருநாகல் வாழ் சமூகம் என்பதனால் இந்த நிலையா அல்லது..? எப்போதும் அரசியல் அடையாளம் அற்று அன்னியவர்களிடம் கையேந்த வேண்டுமா..?? என்ற கேள்விகள் எல்லாம் எம்முடைய மனதுக்குள் இடியாய் எழுகின்றது.
குருநாகல் மாவட்டம் கடந்த பாராளுமன்னறத் தேர்தலில் விட்ட பிழையை ஈடுசெய்ய அல்லாஹ்வின் உதவியால் உங்களால் மட்டும்தான் முடியும் என்கின்ற ஒரே நம்பிக்கையில் இறைவனையும் குருநாகல் வாழ் அரசியல் அனாதைகளையும் சாட்சியாக வைத்து இந்த மடலை எழுதுகின்றேன்.
நீங்கள் குளியாப்பிடிய மடலஸ்ஸ கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குறிப்பிட்டது எனக்கு நினைவிருக்கின்றது மற்றைய அரசியல் வாதிகளைவிட தமது அமைச்சிலிருந்து பெரும் தொகை பணத்தை ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்யக்கூடிய திறமை மிக்கவரான ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்கு கடந்த கால பாராளுமன்றத் தேர்தலில் நடந்த அநியாயம் இதுவரை யாருக்கும் நடக்கவில்லை என்று கூறியிருந்தீர்கள்.
அதே போன்று பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததன் பிற்பாடு ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்குத்தான் தேசியப்பட்டியல் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று பல இடங்களில் கூறியிருந்தீர்கள் ஆனால் இன்னும் அது பற்றி எந்தக் கவனமும் இல்லாமல் நீங்கள் இருப்பதை நினைக்கும் போது மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது
அவ்வாரு நீங்கள் கூறியிருந்தும் தலைவரவர்களே...?? ஏன் குருநாகல்
மாவட்டத்திற்க்கு தேசியப்பட்டியல் தர மறுக்கின்றீர்கள் என்பதுதான்
புரியாத புதிராக இருக்கின்றது.
பெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்க்கு பிற்பாடு கட்சியினால் தேசியப்பட்டியல் வழங்கும் போது வடகிழக்கிற்கு வெளியே வழங்கும் சம்பிரதாயத்தைதான் நீங்கள் கடைபிடித்தீர்கள் அந்தவகையில் நீங்கள் தேசியப்பட்டியலை குருணாகல் மாவட்டத்திற்க்கு வழங்கி குருணாகல் அரசியல் அநாதைகள் கௌரவப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது இருக்கிறது
இன்றைக்கு குருநாகல் மாவட்டத்தில் பள்ளிகள் உடைக்கப்படுகின்றது குருநாகல் தொழிநுட்பக் கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களின் அனுமதி மறுக்கப்படுகின்றது தொழில்தகைமைகள் இருந்தும் அவைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றது இத்தனை அநியாயங்களையும் தட்டிக் கேட்க்க ஒரு தைரியமான அமைச்சர் எமது குருநாகல் மாவட்டத்தில் இல்லை.
தலைவரவர்களே ஒவ்வொரு குருநாகல் மாவட்ட முஸ்லிம்களும் நாளுக்கு நாள் அரசியல் அனாதைகளாக தமது உடமைகளையும் அரசியல் அடையாளத்தையும் இழந்து வாழ்கின்ற எமக்கு உங்களின் தேசியப்பட்டியல் ஒரு மிகப் பெரிய சத்தியாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பகிரங்க மடலை நிறைவு செய்கின்றேன்...
இப்படிக்கு உங்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டன்..
றிம்சி ஜலீல்..