Wednesday, May 31, 2017

மலசல கூடத்தை இறைச்சி வெட்டும் அறையாக பாவனை செய்த மட்டக்களப்பு பிரபல ஹோட்டல் - அதிர்ச்சித் தகவல்

(பாறுக் ஷிஹான்) மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலசல குழியருகே இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளன.

 மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று(30)  பிற்பகல்  மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது குறித்த பிரபல ஹோட்டல் ஒன்றில்   இவை மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில்  அப் பிரபல ஹோட்டலுக்கு   சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர்  அங்கிருந்த பாவனைக்கு உதவாத உணவு வகைகளை  கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.


இதன்போது பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  அந்த ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் சுகாதார மற்ற முறையில் காணப்பட்டதாகவும்  இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அங்கு இருந்த அநேக   உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இருக்கவில்லையென்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றி வளைப்பின் போது பிரபல ஹோட்டல் உரிமையாளர் நோன்பு இருந்துள்ளார்.இதனால் சற்று கோபமடைந்த இவ்வாறு சுகாதாரமற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்ற நீங்கள்9உரிமையாளர்)   நோன்பினை விட்டு விட வேண்டும் என  அவ்விடத்தில் இருந்து கேட்டுக்கொண்டதனை காண முடிந்தது.

 மேலும்  மலசலகூடத்துக்குள் வைத்து இறைச்சி வெட்டியமை உணவுப்பண்டங்களை தயாரிப்பதற்குப் பொருத்தமற்ற உடல்நலத்துடன் காணப்பட்டமை போன்றவை தொடர்பில்  மட்டக்களப்பு மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் குறித்த ஹோட்டல் உடனடியாக    சீல் வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

நோன்பு காலத்தில் கூட இவ்வாறாக சுகாதார மற்ற முறையில் ஹோட்டல்கள் இயங்குவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சிகளை தற்போது  ஏற்படுத்தி உள்ளது.




Disqus Comments