Thursday, October 23, 2014

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை சுபநேரத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இதனையொட்டி இன்றும், நாளையும் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு எம்.பிக்களின் ஓய்வு அறைகள் அலுமாரிகள் என்பனவும் சோதனையிடப்பட இருப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். நாளை வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் சனிக்கிழமை முதல் (25 ஆம் திகதி) டிசம்பர் 22 வரை பாராளுமன்ற விவாதங்கள் இடம் பெறவுள்ளன.

ஒக்டோபர் 25 முதல் நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. முதலாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் முதலாம் திகதி மாலை 5.00 மணிக்கு இடம்பெறும்.

இதேவேளை நவம்பர் 3 ஆம் திகதி முதல் குழுநிலை விவாதம் ஆரம்பமாகிறது. இதில் சிரேஷ்ட அமைச்சுக்கள் (விசேட அலுவல்களுக்கான செயலகம்) அடங்கலாக 23 அமைச்சுகள் மீதான விவாதம் ஒரே தினத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

வரவு செலவுத்திட்ட விவாதங்கள் தினமும் 8 மணி நேரம் நடைபெற இருப்பதோடு ஒவ்வொரு செலவுத் தலைப்பிற்கும் 2 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் கொண்ட நிவாரணங்கள் வழங்கும் வரவு செலவுத்திட்டமாக அமையுமென அறிவிக்கப்படுகிறது. 22 நாட்களில் 192 மணி நேரம் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
Disqus Comments