முச்சக்கரவண்டி கட்டணங்களை 10 வீதத்தால் குறைப்பதற்கு முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கட்டணக் குறைப்பிற்கு இணக்கம் காணப்பட்டதாக உள்ளக போக்குவரத்து அமைசசர் ரஞ்சித் மதுமபண்டார குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் அதன் அணுகூலங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோது இந்த மாத இறுதியில் இருந்து கட்டணங்களை 10 வீதத்தால் குறைப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன்களின் கட்டணங்களை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வேன் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 8 முதல் 10 வீதம் வரை குறைக்கப்படவுள்ளன.
9 ரூபாவாக இருக்கும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 8 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.
