எமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்கள் சந்தேகப்படுகின்ற வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. அவ்வாறான சமயங்களில் நாம் சற்று அக்கறையுடன் செயற்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே நாங்கள் முயற்சித்தோம். ஆனால் நாங்கள் தீர்த்த பிரச்சினைகளும் தற்போது மீண்டும் குழம்பிக்கொண்டிருக்கின்றன. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேர்மையான முறையில் தமது மக்களுக்காக செயற்பட்டு வந்தார். ஆனால் அப்போதைய மன்னார் ஆயர் அதற்கு இடையூறாக இருந்து வந்தார்.
பல கவலையான சம்பவங்கள் இடம்பெற்றன. அந்த மக்கள் அதிகளவில் ஐ.தே.க ஆட்சிக் காலத்தில கஷ்டப்பட்டனர். புலிகளினாலும் கஷ்டங்களை எதிர்கொண்டனர். முஸ்லிம் நாடுகளுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறந்த தொடர்புகள் காணப்பட்டன. இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்கினர்.
எமது காலத்தில் பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எம்முடன் இருந்தனர். ஆனால் சில அமைப்புக்கள் உருவாகியதுடன் முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அமைப்புக்கள் உருவாக்கப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த அமைப்புக்களின் ஒருசில செயற்பாடுகளை நாங்கள் எதிர்க்கின்றோம்.
மஹிந்த ராஜபக்ஷவும் அவற்றை எதிர்த்தார். அந்த அமைப்புக்கள் செய்த சில நடவடிக்கைகள் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளாக உருவெடுத்தன. அவற்றிற்கு ஊடகங்களும் தேவையற்ற பிரசித்தங்களை வழங்கின.
முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்ற விடயத்தில் பாரிய குறைபாடுகள் இருந்தன என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். முஸ்லிம் மக்கள் சந்தேகப்படுகின்ற வகையில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. கிரீஸ் பேய் சம்பவங்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவையென காட்டப்பட்டன. நாம் சற்று அக்கறையுடன் செயற்பட்டிருக்கலாம் என ஏற்றுக் கொள்கின்றேன்.
இன்று அரசாங்கத்திலிருக்கின்ற சிலர் அன்று எமது பக்கத்திலிருந்து கொண்டு சில நடவடிக்கைகள் எடுப்பதற்கு இடமளிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ 290 பள்ளிவாசல்களை மீண்டும் திறந்து வைத்தார்.
பல பள்ளிவாசல்களை மறுசீரமைப்பு செய்தார். கூரகல பள்ளிவாசல் விவகாரத்தை நிவர்த்தி செய்ய நாம் முயற்சித்தோம். ஆனால் அவ்வாறான சம்பவங்களில் முஸ்லிம் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
ஆனால் முஸ்லிம் மக்களின் உண்மையான பிரச்சினையை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும் தவறான பிரச்சாரங்கள் காரணமாக நிலைமை மாற்றமடைந்தது என்றும் பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்
