Thursday, November 22, 2012

மான் இறைச்சி என்ற பெயரில் குரங்கு இறைச்சி விற்பனை

 பொலன்னறுவை, ஹபரனை, அநுராதபுரம் ஆகிய நகரங்களை அண் டியுள்ள பிரதேசத்தில் வாகனங்களில் பயணிக்கும் நீங்கள் சற்று ஓய் வெடுப்பதற்கு ஒரு மர நிழலில் வாகனத்தை நிறுத்தி வைக்கும் போது ஓரிருவர் உங்களுக்கு மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு நெருங்கி வருவார்கள்.

அவ்விதம் வரு பவர்கள் நீங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களா, அல்லது வன பரிபாலன திணைக்களத்தின் உத்தியோகத்தர்களா என்பதை சற்று அவதானித்த பின்னர் நீங்கள் சாதாரணமானவர்கள் என்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டு உங்களிடம் நெருங்கி வந்து இரகசியமாக சேர், என்னிடம் உப்பு போட்டு காயவைக்கப்பட்ட மான் இறைச்சியும், மரை இறைச்சியும் இருக்கிறது.

ஒரு கிலோ மான் இறைச்சியை 250 ரூபாவுக்கும் ஒரு கிலோ மரை இறைச்சியை 200 ரூபாவுக்கும் தருகிறேன். வாகனத்தில் மறைத்து வைத்து கொண்டு செல்லுங்கள் என்று சொல்லுவார்கள். மான், மரை இறைச்சியை விரும்பி உண்பவர்கள் எங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்ற நினைப்பில் ஐந்தாறு கிலோ மான் அல்லது மரை இறைச்சியை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.

அப்போது அவர்களுக்கு தாங்கள் வாங்கியிருப்பது குரங்கு இறைச்சி என்பது தெரியாது. குரங்கு இறைச்சி சாப்பிட்டு அனுபவம் உள்ளவர்கள் குரங்கு இறைச்சியும் மான் இறைச்சியைப் போன்று சுவையாக இருக்குமென்று நினைத்து, அதனை உண்டு மகிழ்கிறார்கள். குரங்கு இறைச்சியை சாப்பிட்டவர்கள் அதில் மான் இறைச்சியை விட தசைநார்கள் அதிகமாக இருக்கிறதென்றும் ஆனால், தெரியாதவர்கள் அதனை மான் இறைச்சி என்று கூறுகிறார்கள்.

மான், மரை இறைச்சியை சாப்பிட விருப்பமானவர்கள் அது சட்டவிரோதமான செயற்பாடு என்றாலும் மிகவும் அவதானமாக அவை உண்மையிலேயே மான், மரை இறைச்சியா என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னரே வாங்க வேண்டும். பொலன்னறுவையில் கடந்த வாரம் கருங்குரங்குகளை சுட்டுக் கொன்று இறைச்சியாக விற்ற ஒரு நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Disqus Comments