(VR)13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படுவதை ஆதரித்து
வாக்களித்தமைக்காக ஸ்ரீ.ல.மு.கா மாகாண சபை உறுப்பினர்கள் இருவர்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் கொள்கையையும்,
தீர்மானத்தையும், நிலைப்பாட்டையும் மீறி, வடமேல் மாகாண சபையில்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படுவதை ஆதரித்து
வாக்களித்தமைக்காக அந்த மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை
பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷா, ஆப்தீன் யெஹியா
ஆகிய இருவரையும் கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும், அதனூடாக கட்சியில்
அவர்கள் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும கட்சியின் தலைவர் நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம் தமக்கு யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு
உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தியுள்ளார்.
இவர்களுக்கு அதற்கான கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி அனுப்பிவைத்துள்ளார்.
அரசியலமைப்பில்
திருத்தம் செய்யப்படுவதற்கு எதிரான தீர்மானத்தை கட்சியின் பேராளர் மாநாடு
மேற்கொண்டிருக்கத்தக்கதாகவும், கட்சியின் கொள்கைகளுக்கு மாற்றமாகவும்,
அமைச்சரவையில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிலைப்பாட்டிற்கு
மாற்றமாகவும் செயல்பட்டு கட்சியின் கட்டுக்கோப்பை மீறிவிட்டார்கள்
என்பதற்காக இந்த உறுப்பினர்கள் இருவரும் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள்
இருவரிடம் இருந்தும் விளக்கம் கோரும் கடிதங்கள் விரைவில்
அனுப்பிவைக்கப்படவுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட கூட்டத்திலும் இவ் விவகாரம் தொடர்பாக
விரிவாக ஆராயப்படவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மற்றொரு
வடமேல் மாகாண சபை உறுப்பினரான தஸ்லீம் வாக்களிப்பு இடம்பெற்ற சமயம்
நாட்டில் இருக்கவில்லை என தெரியவருகிறது.