Friday, July 5, 2013

எனது மகன் விமானத்தில் குடித்ததை நிருபித்தால் பதவி விலகுவேன்-அமைச்சர் கெஹலிய

எனது மகன் றமித் றம்புக்வெல்ல விமானத்தில் குடித்துவிட்டு குழப்பம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகன் அதிகமாகக் குடித்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற "ஏ" கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது, கழிவறையின் கதவு என எண்ணிக் கொண்டு றமித் றம்புக்வெல்ல விமானத்தின் கதவைத் திறக்க முனைந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் றமித் றம்புக்வெல்ல குடித்திருந்தார் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரச ஊடகச் சந்திப்பில் அரச ஊடகப் பேச்சாளராகக் கலந்து கொண்ட கெஹெலிய றம்புக்வெல்ல, தனது மகன் குடித்திருந்ததாகவும், விமானத்தில் குழப்பம் விளைவித்ததாகவும் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால் தனது பதவிகளிலிருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்திற்குள் செல்லும் முன்னர் தனது மகன் ஒரு கோப்பை "றெட் வைன்" மாத்திரமே அருந்தியிருந்ததாகக் குறிப்பிட்ட கெஹெலிய றம்புக்வெல்ல, இங்கிலாந்தின் ஊடகங்களில் தனது மகன் அதிக மணிக்கணக்காக மதுவருந்தினார் என்று வெளியாகும் செய்திகளை மறுத்தார்.

தன்னையறியாமல் செய்த தவறுக்காக தனது மகன் விமானப் பணியாளர்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியதாகத் தெரிவித்த கெஹெலிய றம்புக்வெல்ல, அத்தோடு, தனது மகனின் மன்னிப்பை குறித்த விமான சேவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். -
Disqus Comments