Thursday, October 17, 2013

புலமைப்பரிசில் தொகையை 500யிலிருந்து 2000 ரூபாவாக அதிகரிக்க கேரிக்கை

(TM)தரம் 5 புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை ரூபா 500 இலிருந்து 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென கல்வித்துறை சார்ந்த வாண்மையாளர்கள் கேட்டுள்ளனர்.

அதிகரித்துச் செல்லும் தற்போதைய வாழ்க்கை செலவுகளை கருத்திலெடுத்தால் மாதம் 500 ரூபாவுடன் மாணவன் ஒருவரன் தனது கல்விச் செலவை சமாளிக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகுமென இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோஸப் ஸ்ராலின் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்க வருடாந்தம் 490 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது என்றும் அவர்  கூறினார்.

கடந்த சில வருடங்களாக உரிய சமயத்தில் நிதி கிடைக்காமையால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் உதவிப்பணம் கிடைக்கவில்லை. இதனால் புலமைப்பரிசில் வழங்கும் நோக்கம் மீறப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

2013 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார் இது புள்ளிவிவரங்களின் தவறான பயன்பாடாகுமென அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு புலமைப் பரிட்சையில் சித்தி வீதம் பற்றி பேசுவது அர்த்தமற்றது இங்கு வெட்டுப்புள்ளியே கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.

வெட்டுப்புள்ளியே பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதையும் உதவித்தொகை பெறுவதையும் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

உண்மையில் 2012 இல் புலமைப்பரிசில் உதவித்தொகையை பெற்றவர்கள்; 10.76 சதவீதமாக குறைந்துள்ளது  இதை அமைச்சர் கூறத்தவறியுள்ளார் என்றும் ஸ்ராலின் கூறினார்.

எனவே, அமைச்சர் வெட்டுப்புள்ளியை குறைத்து கூடிய மாணவர்கள் புலமைப்பரிசில் பெற்று நன்மையடைய வழி செய்ய வேண்டுமெனவும் அவர் கூறினார்.
Disqus Comments