நாட்டின் தேர்தல் முறைமை மாற்றப்பட்ட பின்னரே அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. காரணம் தேர்தல் முறையை மாற்றுவதாக நாங்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தேர்தல் முறையை மாற்றினால்தான் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் திருத்தம் நிறைவேற சுதந்திரக் கட்சியின் ஆதரவு தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் எனது தனிப்பட்ட கருத்தானது தற்போதை முறை மாற்றப்படவேண்டும் என்பதாகும். இதில் எந்த சிக்கலும் இருக்க முடியாது. தேர்தல் முறையை மாற்றினால் நான் சில வேளை எதிர்வரும் தேர்தலில் தோல்வியடையலாம். ஆனால் இந்த முறை மாறவேண்டும் என்பதே முக்கியமாகும்.
கேள்வி: அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: நாட்டின் தேர்தல் முறைமை மாற்றப்பட்ட பின்னரே அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. காரணம் தேர்தல் முறையை மாற்றுவதாக நாங்கள் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளோம். அதனை மீறிச் செல்ல முடியாது. தேர்தல் முறை மாற்றத்தின் பின்னரே தேர்தல் நடைபெறும் .இதற்கான நடவடிக்கைகயை நாங்கள் எடுப்போம்.
கேள்வி: 19 ஆவ து திருத்தச் சட்டம் எப்போது வரும்?
பதில்: மார்ச் மாதத்தில் வரும்.
கேள்வி: தேசிய அரசாங்கம் அமைக்க தயாரா?
பதில்: கட்டுநாயக்கவில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலமர்வில் தேசிய அரசாங்கம் குறித்து ஆராயபபட்டது. இறுதியில் தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சி இணங்கியது. இன்று ( நேற்று) சுதந்திரக் கட்சியின் மததிய குழு கூடவுள்ளது. அந்தக் குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
கேள்வி: தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் வலுவான எதிர்க்க்கட்சி இல்லாதுபோய்விடுமே?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணி இடதுசாரி கட்சிகள் என பல உள்ளனவே.
கேள்வி வலுவான எதிர்க்கட்சி?
பதில்: தேசிய அரசாஙகம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது. பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் கூட இரண்டு வருடங்களே தேசிய அரசாங்கம் இருககும். அதன் பின்னர் தனித்தனியாக சென்றுவிடுவோம்.
கேள்வி: தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றனவா?
பதில்: சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் ஆராயப்படும்.