Tuesday, February 17, 2015

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு

இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான மனித உரிமைகள் பேரவை ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைகள் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு முறை மட்டுமே இதனை தாம் ஒத்திவைப்பதாக மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் மாறி வரும் நிலைமைகளில் இந்த அறிக்கையை பலப்படுத்தும் வகையில் மேலும் ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னைய அரசைப் போலல்லாது இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்த பல விடயங்களில் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ள நிலையில், அவர்களது கடப்பாடுகளை யதார்த்தமாக்க தனக்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.முன்னைய ஆணையரான நவநீதம்பிள்ளைக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூன்று நிபுணர்களும் இந்த கால நீடிப்பு அவசியமானது என்று தனக்கு கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியம் வழங்கியவர்களும், இந்த காலநீடிப்பு இதனை நீர்த்துப்போகச் செய்யும் விஷயமாக எண்ணி அச்சம் கொள்ளலாம் என்ற யதார்த்த்த்தை தான் ஏற்பதாக கூறியுள்ள அவர், ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கான பலமான குரலாக தாம் ஒலிப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
Disqus Comments