-ரஞ்சித் ராஜபக்ஷ தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாயை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் ஜ.பீ.டீ.லியனகே திங்கட்கிழமை (9) உத்திரவிட்டுள்ளார்.
மேற்படி பெண்ணை, நோர்வூட் பொலிஸார் திங்கட்கிழமை கைதுசெயது நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.
இச்சம்பவத்தில், ரமேஷ்ராஜா சௌமியா என்ற சிறுமியே பாதிக்கப்பட்ட நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இச் சிறுமியின் தந்தை கொழும்பில் வேலை செய்யும் நிலையில் தாய், தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்த தாய் இதற்கு முன்னரும் பலமுறை அச்சிறுமியை துன்புறுத்தியதாக சிறுமியின் பாட்டனாரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு தாயை வரவழைத்த பொலிஸார், அவருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, அனுப்பி வைத்திருந்தனர்.
இந்நிலையில், தான் தோட்டத்தில் வேலை செய்வதால், மேற்படி சிறுமியை தோட்டத்திலுள்ள சிறுவர் பாராமரிப்பு நிலையத்திலேயே விட்டுச் செல்வார். வழமைப்போல ஞாயிற்றுக்கிழமை (08) சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளார். பராமரிப்பு நிலையத்தில் எழுந்து நடமாட முடியாத அளவுக்கு அச்சிறுமியின் கால்களில் காயத்தை கண்ட பாராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளர், காரணத்தை சிறுமியிடம் கேட்டறிந்த பின்னர் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிறுமியின் தாயை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சிறுமி, வீட்டில் குழப்படி செய்வதாகவும் அதனாலேயே தான் அடித்ததாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது சிறுமியின் தாய் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
