பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைத்துவிட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை பிரதான இரு கட்சிகளும் மேற்கொண்டு வருவதுடன் ஆங்காங்கே பிரசார வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது உள்ளிட்ட நூறு நாள் வேலைத்திட்டமானது எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதன் அடிப்படையில் ஏப்ரலில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜூன் மாதம் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சகல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதுடன், தம்மோடு இணைந்து போட்டியிடவுள்ள சிறுபான்மைக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பது சவாலுக்குள்ளாகியுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தற்போதுள்ள தேர்தல் முறைமையை மாற்றியமைக்காமல் பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு தனக்கு இணக்கமில்லை என அண்மையில் அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை என்றும் நூறு நாள் வேலைத்திட்டத்தினை செயற்படுத்தவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டினை மேற்கொண்டதாகவும் அதற்காக அந்தக் கட்சியின் பின்னால் செல்லவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜாதிக ஹெல உறுமய அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில்இ ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் ௨௩ ஆம் திகதியுடன் இந்த அரசுக்கான ஒட்சிசன் நிறைவடைவதாகவும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறும் கேட்டிருந்தார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெ ளிவந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் தேர்தலை ஜூன் மாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏலவே கூறியதுபோன்று தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியும் வலியுறுத்தி வருகின்றது.