Saturday, July 25, 2015

'நல்ல குடிமகன் வெற்றிலைக்கு போடமாட்டான்' - றிஷாத் பத்தியுத்தீன்

-எஸ்.றொசேரியன் லெம்பேட் துன்பப்பட்டு துயரப்பட்டு பல்வேறான இன்னல்களுக்கு முகம்கொடுத்த எந்தவொரு நல்ல குடிமகனும் வெற்றிலைக்கு இம்முறை வாக்களிக்கமாட்டான் என்று அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தெரிவித்தார்.  

நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு மைத்திரிபால சிறி சேனவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கிய வரலாற்றை நாம் இன்று மறந்து விட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.  மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை வியாழக்கிழமை (23) மாலை திறந்து வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்.. யாரை வீட்டுக்கு நாம் அனுப்பினோமோ அவர் மீண்டும் மறு வடிவத்தில் பிரதம வேட்பாளராக வருகை தந்திருக்கின்றார். அனுராதபுரத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்த அனைவரும் கைகளை உயர்த்தி 113 பேரை வெற்றியடையச் செய்து மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி தருகின்றோம் என சபதமிட்டுள்ளனர். 

இரண்டு முறை ஜனாதிபதியாக வெற்றி பெற்று இரண்டாவது தடவை 150 க்கு மேல் நாடாளுமன்றத்தில்  பெற்றனர்.  அக்காலத்தில், சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடம் பெற்ற அநீதிகளையும்,துன்பங்களையும் சுட்டிக்காட்டிய போது கண்டும்,காணாதது போல் மத வாதிகளையும் இன வாதிகளையும் தான் விரும்பியதை இந்த நாட்டிலே செய்வதற்கு இடம் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்குவதற்காக அவருடைய முகவர்களாக வன்னி மாவட்டத்திலே சிலர் வெற்றிலைக்கு வாக்குத்தேடி வந்திருக்கின்றார்கள். 

வன்னி மாவட்டத்திலே வாழுகின்ற எந்த ஒரு குடி மகனும்,சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எவரும் இந்த தேர்தலிலே வெற்றிலையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதிலே நாம் உறுதியாக இருக்கின்றோம். காரணம் மஹிந்த ராஜபகஷவை பிரதமராக்கி மீண்டும் இந்த நாட்டிலே மக்களை துன்பத்திலும்,துயரங்களிலும் கொண்டு விட இந்த நாட்டில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த மக்கள் தனது வாக்கை பயண்படுத்த மாட்டார்கள் என நாம் நம்புகின்றோம். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த தேர்தலிலே வன்னி,மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ,புத்தளம் ,குருநாகல் போன்ற பல மாவட்டங்களிலே  போட்டியிடுகின்றது. இத்தேர்தலிலே 8 ஆசனங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமை எங்களுக்கு தெரிகின்றது. அத்தோடு தேசியப்பட்டியல் ஆசனத்தோடு 10 ஆசனங்களை வருகின்ற இந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இதற்கு இந்த நாட்டு மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவார்கள். கடந்த காலங்களிலே சில அரசியல் கட்சித் தலைமைகள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அதனை நிறைவேற்றாத வரலாறு உள்ளது. ஆனால், நாங்கள் கடந்த காலங்களிலே ஒரு மக்களின் பிரதி நிதியாக, நாடாமன்ற உறுப்பினராக,அமைச்சராக இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும்,மக்களுக்கான பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என நாம் செய்திருக்கின்றோம். 

எனவே , இன்று மக்கள் யதார்த்தங்களை புரிந்து கொண்டு உண்மைக்காக,நியாயத்துக்காக இன,மத,பேதங்களுக்கு அப்பால் இந்த நாட்டிலே நிம்மதியாக வாழுகின்ற ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த நல்ல பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்பதற்காக இன்று பலர் எங்களுடன் அணி திரண்டிருக்கின்றார்கள் என்பதனை இங்கு பார்க்கின்ற போது எங்களுக்கு தெரிகின்றது.என அவர் மேலும் தெரிவித்தார். 
Disqus Comments