தமிழக வரலாற்றில் சாதனைகள் படைத்தவர்கள் பலர் அதிலும் ஒரு பெண்ணாக தனித்து நின்று சாதனை படைத்த தமிழத்தின் 8 கோடி மக்களாலும் அம்மாவாக போற்றப்பட்ட தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
அமரர் செல்வி ஜெயலலிதா இலங்கையில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த காலத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு கூறியிருந்தார். யுத்தத்தை நிறுத்துமாறு பல தடவைக்கள் தொலைக்காட்சி ஊடாக தெரிவித்திருந்தார் அவ்வாறு எந்த நாட்டிலும் எந்த மக்களானாலும் அதிகமாக தமிழ் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் கடும் துயரங்கள் ஆகியவற்றிற்கு குரல் கொடுத்து உதவிகள் செய்து வந்த ஒருவர்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரின் இழப்பினை ஈடுசெய்ய முடியாமல் தமிழகம் தவிக்கும் ஒருபக்கம் தமிழக மக்கள் ஆழ்ந்த சோகத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
செல்வி ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க கட்சி இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை ஆட்சியைப்பிடித்ததில் தமிழகத்தில் 05 முறை செல்வி ஜெயலலிதா முதலமைச்சராகவிருந்து இரும்புப் பெண்ணாக ஆட்சி நடாத்திக்காட்டினார். அத்துடன் அதிகமுறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
செல்வி ஜெயலலிதா திரைப்பட நடிகையாக கலை உலகில் இருந்து ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அளவுக்கு திறமைமிக்க தலைவியாக வாழ்ந்து காட்டிய பெருமை பெண் இனத்துக்கே பெருமையாக இருக்கிறது.
இவரின் இழப்பு இந்திய தமிழகம் மாத்திரமன்றி உலக வாழ் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என தனது அனுதாப செய்தியில் இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.