கட்டாரின் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ம் திகதி(நாளை) பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிப்பை நேற்று அமிரி டிவான் வெளியிட்டார்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் வருடத்தின் இரண்டாவது (பெப்ரவரி) மாதத்தில் வரும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த வருடம் பெப்ரவரி 9ம் திகதி கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டார் தேசிய விளையாட்டு தினத்தின் நோக்கம் கட்டார் பிரஜைகளை உடல் ஆரோக்கியத்தை கொண்டுவரும் விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களுக்கு அறிவூட்டுவதாகும். இதற்கான பல தரப்பட்ட விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2022ம் ஆண்டு கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்த உள்ள கட்டார் தேசம் விளையாட்டுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.