இன்றைய தினம் ஆரம்பித்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியாக இடம்பெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதனடிப்படையில் ஆரம்பம் முதலே மிகச்சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி 6விக்கெட்டுக்களை இழந்து 331ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பாக மக்கலம் 49 பந்துகளில் 65 ஓட்டங்களையும், வில்லியம்சன் 57 ஓட்டங்களையும் இறுதிவரை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அன்டர்சன் 46 பந்துகளில் 75ஓட்டங்களைப் பெற்று இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார். இவரது துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்ததுடன், இலங்கை பந்துவீச்சாளர்களை அடித்துத் துவம்சம் செய்திருந்தார்.
இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளர் மற்றும் சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட மலிங்க இன்றைய தினம் பெரிதாக சோபிக்கவில்லை. இவர் தனது 10 ஓவர்களில் 84ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். அத்துடன் விக்கெட் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. இவர் விக்கெட் பெற்றுக்கொண்ட பந்தும் முறையற்ற பந்தாகியமை சோகமே.
தனது 9ஆவது ஓவர் வரை சிறப்பாக பந்துவீசிய லக்மாலும் இறுதி ஓவரில் சோடை போயிருந்தார். லக்மால் 10 ஓவர்களில் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அத்துடன் இந்த ஓவரில் அன்டர்சனின் பிடியை ஜீவன் மென்டிஸ் தவறவிட்டிருந்தார். எனினும் ஜீவன் மென்டிஸ் தனது 2 ஓவர்களில் 5 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். எனினும் இதற்கு பின்னர் இவருக்கு எதற்காக ஓவர்கள் வழங்கப்படவில்லை என்பது பகுறிப்பிடத்தக்கது.
நுவன் குலசேகரவும் தனது 8 ஓவர்களில் 78 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
