Friday, February 27, 2015

பங்களாதேஷ் உடனான போட்டியில் இலங்கை அணி 92 ரன்களால் அபார வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 92 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் இன்று, ஏ பிரிவைச் சேர்ந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

மெல்போர்னில் நடக்கும் இந்தப் போட்டியில், முதலாவதாக நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி அந்த அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லகிரு திரிமானே மற்றும் திலஹரத்ன டில்ஷான் களமிறங்கினர்.

இதில் திரிமானே 52 ஓட்டங்களுடன் வௌியேற, டில்ஷானுடன் குமார் சங்கக்கார ஜோடி சேர்ந்தார்.

சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய இருவரும் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்ததோடு, இணைப்பாட்டமாக 210 ஓட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த இலங்கை அணி 332 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை சார்பாக டில்ஷான் 161 ஓட்டங்களை விளாசியதோடு (146 பந்துகள், 22 பவுண்டரிகள்) ஒருநாள் அரங்கில் தனது 21வது சதத்தையும் பதிவு செய்தார்.

மேலும் தனது 400வது ஒருநாள் போட்டியில் இன்று களமிறங்கிய குமார் சங்கக்கார 76 பந்துகளை எதிர்கொண்டு 105 ஓட்டங்களைப் பெற்று ஒருநாள் போட்டிகளில் தனது 22வது சதத்தை பெற்றார்.

இதில் 1 சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகளும் அடங்கும்.

இதன்படி 333 என்ற கடினமான இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி அடுத்ததாக துடுப்பெடுத்தாடியது.

எனினும் ஷப்பிர் ரஹ்மான் (53), ஷகிப் அல் ஹசன் (46) தவிர்ந்த ஏனைய அனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.

47 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்த பங்களாதேஷ் 240 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணி சார்பில் லசித் மலிங்க 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு, சுரங்க லக்மால், திலஹரத்ன டில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர்.

மேலும் 161 ஓட்டங்களைப் பெற்று, இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தி, இலங்கையின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்த டில்ஷான் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
Disqus Comments