வத்தளை பிரதேச சபையின் தலைவர் உட்பட சிலரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ
விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறுமாயின் பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிரிக்கொத்தாவில் இன்று பகல் இடம்பெற்ற
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்
இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறையினை இல்லாமல் செய்து 18வது யாப்புத் திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் எதிர்பார்ப்பு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினால் நாட்டிற்கு கிடைக்காமல் போகும் எனவும் பிரதமர் இங்கு மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 114 எதிர்க்கட்சி எம்பிக்கள் கையொப்பமிட்டு சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் 100 நாள் துரித வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் யாப்புத் திருத்தம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையினால் சாத்தியமில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு இப்பிரேரணை தொடர்பில் விவாதத்திற்கான தினத்தை தாமதமின்றி ஒதுக்கித் தருமாறும் பிரதமர் சபாநாயகரிடம் கேட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.