Sunday, February 21, 2016

எனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. ஆனால் நான் பொறுப்பாளியல்ல.

நான் இனவாதியல்ல. என்னை முஸ்லிம்களிடமிருந்து தூரப்படுத்துவதற்கு சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பில்லை. என்னுடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம் பெற்றதாக கூறப்படும் அநீதிகள் என்னை மீறி நடைபெற்றவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில்   வெள்ளிக்கிழமை இரவு  மல்வானை உலஹிட்டிவலயில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
என்மீது இனவாத முத்திரை குத்தி எனக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவிய நல்லுறவை சீர்குலைக்க சதித்திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு சர்வதேசமும் உதவியுள்ளது. முஸ்லிம்களுடன் நான் ஆரம்பகாலம் முதல் நல்லுறவை பேணிவந்துள்ளேன். 
சர்வதேசம் என்னை முஸ்லிம்களிடமிருந்து பிரிப்பதற்கு முன்பு எனக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் பலமான உறவுப் பாலம் அமைந்திருந்தது. எனது ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களுக்கு பலமான அரசியல் அங்கீகாரம் வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் நியமனம் பெற்றார்கள். என்றாலும் சர்வதேசம் நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் என இனவாத முத்திரை குத்தி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது.
 என்னிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி சர்வதேசத்துக்கு சார்பான ஆட்சியாளர்களிடம் அதனைக் கையளிப்பதற்கு சர்வதேசம் வகுத்த திட்டமே இதுவாகும். இந்த சதித்திட்டத்தில் சர்வதேசம் வெற்றி பெற்றுக் கொண்டது.
Disqus Comments