Saturday, March 5, 2016

இலங்கை சிறுநீரகம் வியாபாரத்தில் ஈடுபட்ட 8 இந்தியா்கள்.

வெள்ளவத்தை மற்றும் பாமங்கடை பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்கள் 8பேரும், இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சிறுநீரக வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் என்றும் இவர்களை கொழும்பு நீதிமன்ற சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம், கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

இன்று(5/3/2016) காலை கைது செய்யப்பட்ட அறுவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், பாமங்கடை பிரதேச மாடிக் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த மேலும் இரு இந்தியர்களை பொலிஸார் கைது செய்ததாகவும் இவர்கள் 8 பேரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர்களிடம் விசா அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதும் தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது. 

இவர்கள் மேற்படி சிறுநீரக வியாபரத்தில் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களது உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் இவர்களை இந்த வியாபாரத்தில் சம்பந்தப்படுத்திய தரகர் தொடர்பில் விசாரணைகள் நடத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியது. -
Disqus Comments