நான் எனது கிராமப் பாடசாலையிலேயே பயின்றேன். எனது வீட்டில் மின்சாரம் இல்லை. குப்பி விளக்கொளியிலேயே நான் பாடங்களைப் படிப்பேன். அரைக்காற்சட்டை, செருப்புடன்தான் பாடசாலை செல்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்ற "குரு பிரதீபா பிரபா "விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,
எமது நாட்டு கல்வித்துறையில் எவ்வளவோ மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதிலிருந்து பிரச்சினைகள் இருக்கின்றன. நான் அண்மையில் வழிபாடு ஒன்றுக்காக கதிர்காமம் சென்றேன். அப்போது அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் பெண்மணி ஒருவர் ஓடிவந்து நான் தெய்வத்திடம் வேண்டியபடியே நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள். எனது பிள்ளையை ஒரு
பாடசாலையில் சேர்க்க வேண்டினேன். எப்படியாவது என் பிள்ளையை ஒரு பாடசாலையில் சேர்த்துத் தாருங்கள் என்று அழாத குறையாக முறையிட்டார். இதிலிருந்து பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதிலுள்ள குறை நிறைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே நடைமுறையிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும்படி கல்வியமைச்சைப் பணித்திருக்கிறேன்.
ஆசிரியர் தொழில் என்பதை விட "ஆசிரியர் சேவை" என்ற பதமே மிகவும் பொருத்தமாகும். இந்தப் பணியிலுள்ள நெளிவு சுளிவுகளையும் நான் சிறு வயதிலிருந்தே நன்கு அறிந்திருக்கிறேன். ஏனெனில் எனது தாய் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர். களுத்துறை, கம்பஹா என்று நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளில் கற்பித்திருக்கிறார். தனது சொந்த பிரதேசத்திற்கு இடமாற்றம் கோராது தனது பொறுப்பை உரிய பாடசாலைகளில் செய்தார். ஆசிரியப் பண்பு அப்படித்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் உருவாகும் பிள்ளைகளும் நல்ல சீலர்களாக உயர்வார்கள்.
நானும் எனது கிராமப் பாடசாலையிலேயே பயின்றேன். எனது வீட்டில் மின்சாரம் இல்லை. குப்பி விளக்கொளியிலேயே நான் பாடங்களைப் படிப்பேன். அரைக்காற்சட்டை, செருப்புடன்தான் பாடசாலை செல்வேன். ஒருமுறை எனது வகுப்பு மாணவர்கள் புரிந்த கலாட்டாவில் ஆசிரியர் என்னைத்தான் குற்றவாளியாகக் கண்டு கொண்டார். ஆனால் நான் தவறுகளில் ஈடுபடவில்லை. என்றாலும் என்னை அதிபர் அறைக்குக் கூட்டிச் சென்று பிரம்பினால் அடித் தார். அதிபர் அறையில் சில நிமிடங்கள் அடைத்து வைத்திருந்தார். ஆனால் அதனை நான் வீட்டில் வந்து முறையிடவில்லை. அப்படி முறையிட்டாலும் ஆசிரியை என்ற வகையில் எனது தாய் என்னைத்தான் மீண்டும் தண்டிப்பார். இன்று நிலைமை எப்படி?-ஆசிரியர் தண்டித்ததற்காக பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்றெல்லாம் செல்கிறார்கள். ஆசிரியர் பிள்ளைகளை நல்வழிப்படுத்தவேதான் தண்டிக்கவும் கண்டிக்கவும் செய்கிறார்கள்.
பிள்ளைகள் பெரும்பாலான நேரங்கள் பெற்றோருடன் தான் இருக்கிறார்கள். சில மணி நேரங்களே ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த சில மணிநேர உழைப்பிலேயே நாட்டுக்குத் தேவையான நல்ல பிரஜைகளை உருவாக்கித் தரும் பாரிய பணி அவர்களால் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு அவர்கள் எவ்வளவோ அர்ப்பணிப்புச் செய்கிறார்கள். நாடு வேண்டி நிற்கும் சமூகமாற்றத்தை மாணவர் மனதில் விதைக்கச் செய்யும் பணியைஆசிரியர்களால் தான் நிறைவேற்ற முடியுமாகிறது.
அரசின் கொள்கைகளைச் செயற்படுத்த அரசியல்வாதிகளால் இயலாது. அதற்காக ஒவ்வொரு துறைகளிலும் கல்விபெறும் மாணவர்களால்தான் அரசின் திட்டங்கள் அமுலாக்கம் பெறுகின்றன. அதனால் தான் இந்நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறது.
நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கிறேன். அப்படியொரு சந்தர்ப்பத்தில் வவுனியாவில் பாடசாலையொன்றில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 35 மாணவர்களும் சித்தியடையவில்லை என்றும் அதற்கு ஆசிரியர் பௌதிகவள குறைபாடுகளே காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
பின்தங்கிய பகுதிகளுக்கு வளங்கள் வந்தடைவதில்லை என்ற குறையும்
நிலவிவருகிறது. எனவே எமது ஆட்சிக் காலத்தில் வளங்கள் சமமாக நாட்டின் நாலா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒன்பது மாகாணங்களுக்கும் பௌதிக வளங்கள், ஆளணி வளங்கள் சம நிலையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சைப் பணித்திருக்கிறேன்.
ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் எல்லோரும் கௌரவிக்கப்பட வேண்டும். பெற்றோர் 3–4 பிள்ளைகளைத்தான் பராமரிக்கின்றனர். ஆனால் ஆசிரியர்கள் 40 –50 பிள்ளைகளை அதுவும் அதிபர் ஆயிரத்திற்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பராமரிக்கும் பாரிய பொறுப்பில் இருக்கிறார்கள். எனவே இத்தினத்தில் எனது மேலான வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவிக்கிறேன். நாட்டின் சுதந்திரம், மேலான ஜன நாயகத்தை நாம் அனைவரும் நல்ல முறையில் அனுப விக்க நற்பிரஜைகளை உருவாக்கித் தரும் ஆசிரிய சமூகம் வாழ வாழ்த்துகிறேன் என்றார்.