Friday, July 12, 2013

மகியங்கனை பள்ளிவாசல் மீது இனவெறித் தாக்குதல்: பன்றி இறைச்சியும் வீச்சு

(VD)
மகியங்கனை அரபா பள்ளிவாசல் நேற்று வியாழக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ரமழான் காலங்களில் முஸ்லிம்கள் விசேடமாகத் தொழுகின்ற தராவீஹ் தொழுகையின் பின்னர் இனந்தெரியாக குழுவினர் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட பள்ளிவாசல் நிர்வாகி ஒருவர் நவமணிக்கு கருத்து தெரிவிக்கையில்;

நேற்றிரவு 11.10 மணியளவில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது. இதன்போது இரு மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் முகமூடி அணிந்த நிலையில் வந்து பன்றி இறைச்சி மற்றும் அதன் பாகங்களை கொண்டுவந்து பள்ளிவாசலுக்கு முன்னால் கொட்டினார்கள்.

அத்துடன் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலினால் பள்ளிவாசல் ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பின்னர் கதவைத் திறந்துகொண்டு வந்த பள்ளிவாசல் தலைவர் மீதும் மிளகாய்த்தூளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவற்றை முடித்துக்கொண்ட குறித்த நபர்கள் 10 நிமிடங்களின் பின்னர் பள்ளிவாசலை விட்டு வெளியேறினர். அவர்கள் சென்ற பின்னரே பள்ளிவாசலுக்கு மின்சாரம் வந்தது. பள்ளிவாசல் பகுதியில் மாத்திரமே குறித்த 10 நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

நாங்கள் இரவோடு இரவாக பள்ளிவாசலை முற்றாக கழுவினோம். அத்துடன் மகியங்கனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளோம். தற்போது பொலிஸார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
Disqus Comments