Sunday, July 28, 2013

ஆசிரியையை முழந்தாளிட செய்த சரத்குமார வேட்பாளர் பட்டியலில் இல்லை -ஸ்ரீ.சு.க செயற்குழு தீர்மானம்

(VR) ஆசிரியையை முழந்தாளிட செய்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்குவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

நவகத்தேகம நவோதய பாடசாலை ஆசிரியையை முழந்தாளிடச் செய்த இந்த உறுப்பினர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். புத்தளம் நீதவான் சாட்சிகளையும் முறைப்பாட்டாளரையும் அச்சுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையில் இவரை பிணையில் விடுவித்தார்.

இருந்தும் இவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியதாக நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து இவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Disqus Comments