(VD) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்டுள்ள
புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் வடமேல் மாகாண சபை
முன்னாள் உறுப்பினருமான யெஹியா ஆப்தீன் கட்சியிலிருந்து விலகி அரசுடன்
இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து தான் 15 வருடங்களாக அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். எனினும் அக்கட்சி கிழக்கிற்கும் வடக்கிற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளித்து அரசியல் நடத்தி வருவதோடு ஏனைய பிரதேசங்களை புறக்கணித்து வருவதாகவும்யெஹியா குற்றம் சுமத்துகின்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தனது நிலைப்பாடு குறித்து எனது அரசியல் ஆலோசகர்களோடு கலந்தாலோசித்து அதன் முடிவுகளை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளேன் என்றார்.
இதேவேளை, 13 திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தப்பிரேரணை வடமேல் மாகாண சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் கடந்த மாத இறுதியில் கட்சியிலிருந்து யெஹியா ஆப்தீனை தற்காலிகமாக இடைநீக்கியிருந்தது. எனினும் அவர் அரசாங்கத்தின் அச்சுறுத்தல் காரணமாகத்தான் ஆதரவாக வாக்களித்ததிருந்ததாக கூறி கட்சியின் தலைமையிடம் மன்னிப்புகோரியிருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவரை மன்னித்து கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள தீர்மானித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது