இந்தியாவின் கிராமப்புறங்களில் குடும்பம்
தோறும், குடும்பத்தில் ஒருவருக்கு, குறிப்பாக, பெண்களுக்கு இலவசமாக
செல்பேசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் தகவல் தொலைத் தொடர்பு
நிறுவனங்கள் யாவும் 'சமச்சீர் சேவை' என்னும் திட்டத்தின் கீழ் தங்கள்
வருவாயில் 5% அரசுக்கு செலுத்தி வருவதில் சுமார் 24,000 கோடி ரூபாய்
செலவிடப்படாமல் உள்ளதாம். இத்தொகையை எடுத்து கிராமப்புறங்களில்
குடும்பத்தில் ஒருவருக்கு , குறிப்பாக பெண்களுக்கு இலவசமாக செல்பேசி வழங்க
மத்திய அரசு முன்வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,சமையல்
எரிவாயு மானியம், உதவித் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்
திட்டப் பயன்களை பெறுவதற்கு, அக்குடும்பத்தார் அடையாளச் சின்னமாக
பயன்படுத்திக் கொள்ளலாம். 'பாரத் மொபைல் திட்டம்' என்ற இத்திட்டத்தின்
கீழ், கிராமப்புறங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவருக்கு, குறிப்பாக,
ஒரு பெண்மணிக்கு, இலவச செல்பேசி வழங்கப்படும்.
இந்த இலவச செல்பேசி பெறுவதற்குரிய
நிபந்தனைகளாக, குடும்பத்தினரில் யாராவது ஒருவர் கடந்த 2012ம் ஆண்டில்
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை
செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த
மாநிலத்தின் அனைத்து கிராமங்கள், வட்டங்கள், மாவட்டங்கள் அளவில்,
தகுதியானவர்களைக் கண்டறிந்து, பட்டியல் தயாரித்து அனுப்புமாறு, அனைத்து
மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத்
தெரிகிறது.