அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் எமக்கில்லை.
நாட்டையும் சிங்களவர்களையும் காப்பற்றவே நாம் முயற்சிக்கின்றோம்.
இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றிக்காட்டவும் எம்மால் முடியும் என
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர
தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒவ்வொரு
வார்த்தைகளும் தனி நாட்டுக் கோரிக்கையாகவே அமைந்துள்ளன.
சம்பந்தன், விக்கினேஸ்வரன் ஆகியோர் இனவாதம், பிரிவினை வாதம்
பேசும்போது நாம் ஏன் பேசக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த்
தேசியக் கூட்டமைப்போடு அரசாங்கம் இணைந்து செயற்படுவது பற்றியோ,
அரசாங்கம் அழிவதைப் பற்றியோ எவ்வித கவலையும் எமக்கில்லை. நாட்டையும்
நாட்டில் வாழும் அப்பாவி சிங்களவர்களையும் காப்பாற்றவே நாம்
போராடிக்கொண்டிருக்கின்றோம். வடக்கு வாழ் தமிழர்கள் மீது
கூட்டமைப்பு அக்கறை காட்டுவதைப் போன்றே நாட்டின் சிங்களவர்கள் மீது
நாமும் அக்கறை காட்டுகின்றோம்.
இலங்கையில் இன்னொரு யுத்தம்
ஏற்பட்டால் தமிழர்களைக் காப்பாற்ற சர்வதேச நாடுகளும் முன்வரும்.
ஆனால்,சிங்களவர்கள் தொடர்பில் குரல் கொடுக்க எவரும் வரமாட்டார்கள்.
இதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும்,
விக்கினேஸ்வரன், சம்பந்தன் ஆகியோரின் கருத்துகள் அனைத்தும் தனி
நாட்டுக் கோரிக்கையின் அடித்தளமாகும். சி.வி.விக்னேஸ்வரன் பி.பி.ஸி
செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய செவ்வியினை அரசாங்கம்
கேட்கவில்லை என்றே நான் நினைக்கின்றேன். அதை ஜனாதிபதி
கேட்டிருப்பாராக இருந்தால் விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில்
சத்தியப் பிரமாணம் செய்திருக்கவே மாட்டார்.
அரசாங்கம்
தெரிந்தே தவறு செய்கின்றது. இத் தவறில் இருந்து தம்மை
பலப்படுத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மக்களே அரசாங்கத்தை
மாற்ற முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்கு நல்லதை செய்து
நாட்டையும் சிங்கள மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
மேலும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுடன் கைகோர்த்துக் கொண்டு
அரசாங்கத்தை ஆட்டிவைக்க நினைக்கின்றனர். அரசாங்கமும் இதைப்
புரிந்து கொள்ளாது இந்தியாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க
நினைக்கின்றது. இதன் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்பதை அரசாங்கம்
வெகுவிரைவில் புரிந்து கொள்ளும்.
விடுதலைப் புலிகளிடம் இருந்து
நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய ஜனாதிபதி மீண்டு மொருமுறை நாட்டை
கூறுபோட விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.