இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) இந்த நாட்டில் இனி ஜூலை முதலாம் திகதி முதல் ஊடகம் சம்பந்தமான கருத்தரங்குகள், பத்திரிகை மாநாடுகள் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அறிவுறுத்தி, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் சகல அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள், பதிவுகள் போன்றன இதுவரை காலமும் சமூகசேவை அமைச்சின் கீழ் இருந்து வந்தன. அவை தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், வெளிநாட்டு நிதிகளைப் பெற்று கருத்தரங்குகள், தலைமைத்துவ பயிற்சிகள் வேறு எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது.
இந்த அரச சார்பற்ற நிறுவனங்களை கவனிக்கவென பாதுகாப்பு மற்றும் நகர அதிகார சபையின் புதிய அலுவலகமொன்று செத்சிரிபாயவில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.