-சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணத்தில் ஆயிரம் ஏக்கர் காணிகளில் மக்களை 3 கிழமைக்குள் மீள்குடியமர்த்துவதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வலளாய் மாதிரி கிராமத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற வடமாகாண காணி ஆணையாளர், இராணுவ அதிகாரிகள் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆகியோருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், இன்றைய கலந்துரையாடல் மூலம் ஒரு முடி எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 3 வாரங்களுக்குள் ஆயிரம் ஏக்கர் காணிகள் சீர்செய்யப்பட்டு, அந்தந்த காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கு யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்குழு மூலம் காணி உரிமையாளர்களின் தரவுகள் பெறப்பட்டு உரிய கால அவகாசத்துக்குள் குறித்த காணிகள் சீர்செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும். இந்நிலையில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வளலாய் மாதிரிக் கிராம திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த 1000 ஏக்கர் எந்தெந்த பிரிவுகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.