மட்டக்களக்கப்பு நகரில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட பொலிஸார் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நான் பணிப்புரை விடுத்துள்ளேன்
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த விதமான செயற்பாடுகள் இடம்பெறினும் அதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்,
இலங்கையிலும் கிழக்கு மாகாணத்திலும் மக்கள் அச்சமின்றி இயல்பாக சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
மக்களின் சுதந்திரமானதும் நிம்மதியானதுமான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய கடப்பாடு அரசியல் நிர்வாகத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு உள்ளது.
மட்டக்களப்பு நகரில் இடம்பெறவுள்ளதாக கூறப்படும் குறித்த ஒரு சாரரின் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக எனக்கு அறியக்கிடைத்தது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்,முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே அவர்களின் ஒற்றுமைக்கோ சகவாழ்வுக்கோ பங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாட்டையும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
ஆகவே ஒருமைப்பாட்டை குலைத்து அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எவராவது செயற்பட்டால் உடனடியாக அவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
மக்களின் உடமைகளுக்கோ உயிர்களுக்கோ எவ்வித பாதிப்பும் நேராது அவற்றுக்கு உத்தரவாதமளித்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதை பொலிஸார் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் பொலிஸாரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் எந்த வித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் பொலிஸார் எப்போது தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.