ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் பெப்ரவரி மாத சம்பளத்தில் 5000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அந்த 5000 ரூபாவில் கடந்த அரசாங்கத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட தொகை கழிக்கப்பட்டு எஞ்சிய தொகையே பெப்ரவரி மாத சம்பளத்தில் இணைக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் 5000 ரூபா முழுமையாக சம்பள அதிகரிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் 10000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தது. அதில் 5000 ரூபா பெப்ரவரி மாதத்திலிருந்தும் ஏனைய 5000 ரூபா ஜூன் மாதத்திலிருந்தும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டுக்காக முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 3000 ரூபாவை அண்மித்த தொகையை சம்பள அதிகரிப்பாக வழங்கியது. அந்த சம்பள அதிகரிப்பு வெவ்வேறு மட்டங்களில் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் பெப்ரவரி மாதத்திலிருந்து புதிய அரசாங்கம் வழங்கவுள்ள 5000 ரூபா அதிகரிப்பானது கடந்த அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டம் ஊடாக அதிகரிக்கப்பட்ட தொகையை கழித்துவிட்டே வழங்கப்படும். அந்த 5000 ரூபாவிலிருந்து முன்னைய அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய அதிகரிப்பை கழித்துவிட்டு எஞ்சிய தொகை வழங்கப்படும்.
ஜூன் மாதத்தில் 5000 ரூபா வழங்கப்படும். இந்த சம்பள அதிகரிப்பானது அடிப்படை சம்பளத்திலேயே இணைக்கப்படும். இதனை புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் 40 வீதத்துக்கும் அதிகமாக சம்பள அதிகரிப்பை செய்துள்ளோம் என்றார்.
(நன்றி: வீரகேசரி)
