_5.jpg)
பங்களாதேஷில் பஸ்ஸொன்றின் மீதும் டிரக் வண்டியொன்றின் மீதும் பெற்றோல் குண்டுகளை வீசி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 9 பேர் பலியானதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது முதற்கொண்டு இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் 70 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தலின் ஆண்டு தினத்தையொட்டி பொது பகிஷ்கரிப்புப் போராட்டமொன்றுக்கு எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
அந்தத் தேர்தலை பங்களாதேஷ் தேசிய கட்சி பகிஷ்கரிப்புச் செய்திருந்தது.கயிபண்டாவாலிருந்து டாக்காவை நோக்கிச் சென்ற பஸ் மீது வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம் பரிஸல் மாவட்டத்தில் டிரக் வண்டியொன்றை இலக்கு வைத்து சனிக்கிழமை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
.jpg)