இந்தியாவின் டில்லி மாநிலத்தின் சட்டப்பேர வைக்காக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் அரவிந்த கெஜ்ரிவால் மீண்டும் டில்லி முதல்வராகின்றார்.
டில்லி சட்டப் பரேவையில் மொத்தமாக காணப்படும் 70 தொகுதிகளில் 67 இடங்களில் வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துடன் டில்லியில் ஆட்சியமைக்கின்றது. இந்தியாவின் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி மூன்று ஆசனங்களை கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் 31583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் 57213 வாக்குகளை பெற்று இத் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் நுபுர் சர்மாவிற்கு 25630 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கிரண் வாலியாவிற்கு 4781 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளன.இதன் மூலம் டில்லியின் அடுத்த முதல்வராக கெஜ்ரிவால் எதிர்வரும் 14 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
டில்லி சட்டபேரவை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதன்போது எதிர்பார்ப்புகளை விட அதிகமான இடங்களை பெற்ற ஆம் ஆத்மி இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ளது
இதேவேளை இத்தேர்தலில் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிரண் பேடி தோல்வியை தழுவியுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளரான வழக்கறிஞர் எஸ்.கே. பக்காவிடம் 2277 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். பக்காவுக்கு 65919 வாக்குகளும், கிரண் பேடிக்கு 63642 வாக்குகளும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான பன்சிலாலுக்கு 6189 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு டில்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 28 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சி அமைத்த 49 நாட்களுக்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 14-ஆம் திகதி முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் தான் முதல்வர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த பெப்ரவரி 14 ஆம் திகதியில் மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
