Tuesday, November 6, 2012

ஆளும் கட்சிக்கு மாறினார் எஹியா

வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவா் எஹியா இன்று (2012.11.06) அரசுடன் இணைந்து கொண்டுள்ளார். இன்று அவரும்  ரிஸ்வி என்னும் மற்றுமொரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்த போதிலும் வட மேல் மாகாண சபையில்  கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்தது.

"எனினும் வட மேல் மாகாண சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்படுகின்றனர். இதனால் கட்சி தலைமையின் அனுமதியுடன் மாகாண சபையின் ஆளும் கட்சியின் வரிசையில் அமர்வது என தீர்மானித்தோம்" ' என மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா தெரிவித்தார்.

எனினும் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை  உறுப்பினர் தஸ்லீம் சபையின் எதிர்க்கட்சி வரிசையிலேயே இன்று அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபையின் குழு தலைவர் எஹ்யாவிடம் வினவியதற்கு, அடுத்த அமர்விலிருந்து ஆளும் கட்சி வரிசையில் அமர்வதாக உறுப்பினர் தஸ்லீம் உறுதியளித்துள்ளார் என்றார்.

இதேவேளை, தமிழக கூடன்குளத்தில் அமைக்கப்படவுள்ள அனுமின் நிலைத்தினால் கற்பிட்டி பிரேதச மக்கள் பாதிக்கப்படவுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்திற்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா கொண்டுவந்தார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவை அறிவிக்குமாறும் எஹ்யா வட மேல் மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments