கடுமையான
வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மாரவில வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த வென்னப்புவ பிரதேச சபையின் ஆளுங்கட்சி
உறுப்பினர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்
ஞாயிற்றுக்கிழமை இரவு வென்னப்புவ காலவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள
விளையாட்டு மைதானத்திற்கருகில் வைத்தே இவர் மீது கத்திக் குத்துத்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் மாராவில
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த விளையாட்டு
மைதானத்திற்கருகில் வைத்து இருவர் தன்னை கூரிய ஆயுதங்களால்
தாக்கியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த
பிரதேச சபை உறுப்பினர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். முதலில் இரு
தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன்
பின்னரே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்
கிடைத்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இத்தாக்குதல்
சம்பவத்தில் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக
ஊர்ஜிதமாகியுள்ளதுடன் அவர்கள் இருவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர். குறித்த
சந்தேக நபர்களைத் தேடிக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகத்
தெரிவிக்கும் வென்னப்புவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.