Wednesday, October 16, 2013

இலங்கையில் 47,000 பாலியல் தொழிலாளர்; தினத்துக்கு 94,000பேர் வாடிக்கையாளர்கள்

இலங்கையில் 35,000 முதல் 47,000 வரையான பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் இவர்களைத் தேடி ஒரு நாளைக்கு 70,000 முதல் 94,000 வாடிக்கையாளர்கள் செல்வதாகவும் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் போது, அதற்கு முறைகேடான பாலியல் தொடர்புகளே பிரதான காரணம் என கண்டறியப்பட்டதாகவும் இதனால், குறித்த பெண் பாலியல் தொழிலாளர்கள் விசேட அவதானத்துக்குரியவர்கள் என்றும் மேற்படி அமைப்பின் விசேட நிபுணரான தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்தார்.

உலகில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சமாகும். 2011ஆம் ஆண்டில் மாத்திரம் நாளொன்றுக்கு 7,000பேர் இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களில் 97 சதவீதமானவர்கள் குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளிலேயே காணப்படுகின்றனர்.

தெற்காசிய வலயத்தில் மாத்திரம் 2.5 மில்லியன் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் வசிக்கின்றனர். இத்தொகையானது 2001ஆம் ஆண்டில் காணப்பட்ட தொகையை விட 7 இலட்சம் பேரைக் குறைவாகவே கணிப்பிட்டுக் காட்டுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதாக தர்ஷனி விஜேவிக்கிரம மேலும் குறிப்பிட்டார்.
Disqus Comments