Monday, November 4, 2013

காத்தான்குடி ஹோட்டல்களில் சிகரட் விற்பனைக்கு 10ம் திகதி முதல் தடை

(MM)காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் சிகரட் விற்பணை செய்வதை எதிர்வரும் 10ம் திகதியிலிருந்து தடை செய்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் காத்தான்குடி நகர சபை பிரிவில் சிகரட் விற்பணையை முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கான தீர்மானத்தை காத்தான்குடி நகர சபை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களில் கை துடைப்பதற்கு அச்சிட்ட பேப்பர்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அதற்கு பதிலாக வெள்ளைப் பேப்பர்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உணவு தயாரிப்பதற்கு பொரிக்கும் எண்ணையை மீள பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இந்த அறிவித்தல்கள் காத்தான்குடி பிரிவிலுள்ள சகல ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்காக காத்தான்குடி சுகாதார அலுவலகத்துடன் இணைந்து பொதுச் சகாதார பரிசோதகர்கள் மற்றும் நகர சபை ஊழியர்கள் பரிசோதணை நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Disqus Comments