Monday, November 4, 2013

சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் நேற்று நள்ளரவுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை பிரஜைகள் 90 வீதமானவர்கள் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு வாரியத்தின் துணை பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட காலத்துக்குள் அதனைப் பெற தகுதியுடைய சுமார் 10,000 பேரும் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெண்கள் உட்பட ஏனைய 6,000 பேரைப் பொறுத்த வரையில் சட்ட விரோதமாக தங்கியிருந்தாலும் சவுதி அரேபிய அரசாங்கத்தின் பொது மன்னிப்பு வரையறைக்குள் அவர்கள் உட்படாதவர்கள்.

அதாவது விசா இன்றி தங்கியிருந்தமை, கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யாமை போன்ற அந்த நாட்டு சட்ட திட்டங்களை இவர்கள் மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியானவர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான முயற்சிகள் சவுதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவர்களை நாட்டுக்கு அழைப்பது தொடர்பில் பிரச்சினையாகவே உள்ளது என கூறப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புக் காலத்துக்குள் வெளியேற வேண்டுமென்ற அறிவிப்பு வெளியானதும் தாங்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதாக நாடு திரும்பியவர்களில் ஒருவரான மட்டக்களப்பு சத்துருகொண்டானை சேர்ந்த சின்னராசா சிவநிதி தெரிவிக்கின்றார்.

அந்த நாட்டுக்கு சட்ட ரீதியாக முகவர்கள் ஊடாக தொழில் பெற்று சென்று, தொழிலிலும் சம்பளத்திலும் ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே சட்ட விரோதமாக தங்கியிருந்து வேறு இடங்களில் தொழில் புரிய நேரிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

காத்தான்குடியை சேர்ந்த மொகமட் சஜீத், பொது மன்னிப்புக் காலம் முடிவடைவதற்கு அண்மித்த நாட்களில் அந்நாட்டு காவல் துறையினரின் சோதனைகளும் கெடுபிடிகளும் அதிகரித்திருந்தது என்கின்றார்.

நாடு திரும்புவதை துரிதப்படுத்துவதற்காகவும் அதற்கான வேலைகளை இலகுவாக செய்வதற்கும் மேலதிக செலவாக 1500 சவுதி ரியால் தனக்கு தேவைப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

உள்நாட்டில் தங்களால் தொழில் பெற முடியாத நிலையே தொடர்ந்தும் இருப்பதால் மீண்டும் வேறொரு நாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வதையே அவர்களில் பலரும் விரும்புகின்றார்கள்.

பொது மன்னிப்பு காலத்திற்குள் வெளியேறத் தவறி, தொடர்ந்தும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக தமது நாட்டு குடிவரவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

அதாவது சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு 2 வருடச் சிறைத்தண்டனை அல்லது சுமார் 10,000 சவுதி ரியால் தண்டப்பணமாக செலுத்த நேரிடும் என அந்நாட்டு சட்டம் கூறகின்றது.
Disqus Comments