(முஹம்மது முஸப்பிர்) புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உளுக்காப்பள்ளம் சந்தியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், முஹம்மது பாஸர் முஹம்மது சதாம் (வயது 25) எனும் இளம் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் மற்றொருவருக்கும் இடையில் நிலவிவந்த பகையே இந்தக் கத்திக்குத்துக்க காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கரம்பை கடையாமோட்டை வீதியின் உளுக்காப்பள்ளம் சந்தியில் வைத்து குறித்த நபர் மீது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இளைஞர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தலைமைறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TM)