ஃபேஸ்புக் பயன்படுத்தக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் பர்பானி என்ற
பகுதியில் வசித்து வரும் சுனில் தஹிவால் என்பவரின் மகள் ஐஸ்வர்யா (17).
இவர் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் ஃபேஸ்புக் மூலமும், மொபைல் போன்
மூலமும் நண்பர்களுடன் இவர் தொடர்ந்து அரட்டை அடித்து வந்தது இவரது
பெற்றோர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. படிப்பில் கவனம் சிதறிவிடும் என்ற
எண்ணத்தில் இத்தகைய வலைத்தளங்களையும், மொபைல் போனையும் வைத்துக்கொண்டு
நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பழக்கத்தை நிறுத்தும்படி அடிக்கடி
அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை அன்று இரவு
ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தபோது அவருடைய
பெற்றோர்கள் மீண்டும் கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது
அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டார். தன்னுடைய பெற்றோர்கள் தன்னை இதுபோல்
அடிக்கடி தடுப்பதாகக் கூறி இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால்
இருக்கமுடியாது என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு தற்கொலை
செய்துகொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.